

ஈவா பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் திரு.அல்போன்ஸ் ராஜ், திரு.எவாரியஸ்ராஜ் இருவரும் உருவாக்கும் புதுமைப் படைப்பு, ‘மெல்லப் பேசுங்கள்’
இதன் கதை, வசனம், டைரக்ஷன் பொறுப்புக்களை ஏற்றிருப்பவர் ஜி.ஏ.ராஜ். 50க்கும் மேற்பட்ட நாடகங்களை தமிழகத்தில் நடத்தி சென்னை-திருச்சி வானொலி நிலையங்களில் நிறைய நாடகங்களை எழுதியுள்ள இவரது சில நாடகங்கள், அகில பாரத நாடகத்திற்காகப் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறதாம்! குவிட்டா பிலிம்சின் ‘சிகப்பு வானில் பச்சை நிலா’ என்ற படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதியுள்ள இவர், ‘என்னுயிர் நீ தானே’ என்ற படத்திற்கும் கதை வசனம் எழுதி வருகிறார். டைரக்டர் முகிலனிடம் ‘ஒரே முத்தம்’ படத்திற்கு ஒன்றாக பணியாற்றியவர்.
‘மெல்லப் பேசுங்கள்’ படத்தைப் பற்றி டைரக்டர் ஜி.ஏ. ராஜ் கூறியதாவது –
‘கனவுகளையும் – கற்பனைகளையும் காகிதமாக்கிப் பழக்கப்பட்ட நான் இப்போது நிழற் சலனப் படத்தில் (சினிமாவிற்கு) நெருக்கம் கொண்டுவிட்டேன்.
விக்ரமாதித்தன் கதையும், ஆயிரத்தியோரு இரவுகளும், அலாவுதீனும் அற்புத விளக்கும் என்றெல்லாம் 18ஆம் நூற்றாண்டு கதை சொல்ல எனக்குத் தகுதியில்லை. அதுஎனக்குத் தேவையும் இல்லை.
கி.பி.இரண்டாயிரத்திற்குப் பின்
இந்த மனிதர்கள் –
இவர்கள் மனம் –
இவர்கள் வாழ்வு –
இவர்கள் குடும்பம் –
இவர்கள் கற்பு நெறி –
எப்படி இருக்கும் என்றுதான் எண்ணிப் பார்க்கிறேன்.
அதையே சொல்லத் துடிக்கிறேன்.
இதிகாச கண்ணகி போல் –
நாடு நகரெங்கும் ஒரு கோடி கண்ணகிகள் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால் ஒருத்திக்காகத் தான் மதுரை எரிந்தது> இந்த ஒரு கோடி கண்ணகிகளுக்கும் நித்தம் கற்பு நிவேதனம் நடக்கிறதே. இதற்காக இந்தியா எரிக்கப்படுமா? எழுதத் தெரிந்ததை எல்லாம் – படம் பிடித்துக் காட்டினால் என்னை வர்க்கக் கடலில் தள்ளி விடுவார்கள்! சொல்ல வேண்டியதைத் துணிவாகச் சொல்வேன் – சுவையாகச் சொல்வேன் – ஆனாலும் விழியோரத்தில் வேள்வி தீ வளர்த்துக் கொண்டு ஒரு ‘கம்யூட்டரைப்’ போல் மனக் கணக்கில் – வாழ்ந்து கொண்டிருக்கும் நம் பெண் வர்க்கம் பற்றி எழுத ஒரு நூறு கதைகள் உண்டு. அதில் சம்பிரதாய அத்துமீறல்கள் இருக்க நேரிடலாம் – அதற்காக உண்மையை மறைத்தல் நல்லதல்லவே! சட்ட திட்டங்கள் கொண்ட நம் சமூகத்தின் அத்துமீறல்களின் தொகுப்பே ‘மெல்ல பேசுங்கள்! ‘அத்து மீறுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள்’ இப்படி சந்து பொந்துகளில் எல்லாம் எச்சரிக்கை போர்டுகள் தொங்குகின்றன. ஆனால் அத்துமீறுவதற்குக் காரணம் என்ன? யோசித்துப் பார்க்கிறேன். எனவே தான் மெல்லப் பேச முன் வருகிறேன். எத்தனை காலங்கள் தான் மெல்லப் பேசுவது? நாம் நம் பின் வருபவர்களிடம் கேள்வி கேட்போம் – என்றாவது பதில் தருவார்கள்’
பல படங்களுக்கு வெற்றிகரமாக ஒளிப்பதிவு செய்த டி.எம்.வெங்கடேஷ் இதன் ஒளிப்பதிவாளர். இசை, சங்கர் கணேஷ், கவிஞர் தமிழ்மாறன் கருத்துச் செறிந்த பாடல்களை இயற்றி வருகிறார். முற்றிலும் புதிய நடிக – நடிகர்களே இந்தப் படத்தில் நடிக்க இருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.