

பகிரா என்கிற சிறுத்தைப் புலி, பாழடைந்த படகொன்றில் தனித்து விடப்பட்ட குழந்தையொன்றைக் காப்பாற்றி, அதனை ஓநாய்களின் குடும்பத்தில் வளர்க்க ஏற்பாடு செய்கிறது. பத்து வருடங்கள் பறந்தோட, அந்தச் சிறுவனின் பெயர் மெளக்ளி என வழங்கப்படுகிறது. ஷேரிகான் என்கிற புலி, இந்த மெளக்ளியை அறைந்து கொன்று விடுவதினின்று காப்பாற்ற, பகீரா அவனை மனிதர்கள் இருக்கும் இடத்திற்கு காட்டு வழியில் அழைத்துச் செல்கிறது. போகும் வழியில் அடுத்தடுத்து சில பயங்கர வினோத சம்பவங்கள் நிகழ்கின்றன. மலைப்பாம்பு, யானைக் கூட்டம், குரங்குக் கூட்டம், புலி ஆகியவைகளிலிருந்து சிறுவனை பகீரா காப்பாற்றுகிறது. பாலு என்கிற கரடியும், சில கட்டங்களில் மெளக்ளிக்கு உதவி செய்கிறது. அப்போது ஒரு சம்பவம் நிகழ்கிறது. ஒரு இந்திய சிறுமி அங்கிருந்த நீரோடையில் தண்ணீர் எடுக்க வருகிறாள். மிருகங்களையே பார்த்து பழக்கப்பட்ட மெளக்ளிக்கு அந்தச் சிறுமியைப் பார்ப்பது புது அனுபவமாக இருந்தது. தண்ணீரின் நிழலில் சிறுவனின் முகத்தைக் கண்ட சிறுமியின் பார்வை அவன் பால் செல்கிறது. இப்போது மெளக்லி மிருக உலகத்தை அடியோடு மறந்து அந்த சிறுமியின் பின்னால் கிராமத்திற்குச் செல்கிறான். இது தான் வால்ட் டிஸ்னியின் ரட்யார்ட் கிப்ளிங்கின் கற்பனைக் கதை. இப்படி காட்டில் வசிக்கும் மிருகங்களுடன் வாழ விரும்பும் ஒரு சிறுவனின் கதையை வினோதமாக நகைச்சுவை மிளிர, கிளுகிளுக்கும் இனிய இசையுடன் திரைப்படமாகத் தயாரித்திருக்கின்றனர். இப்படத்தில் வரும் மிருகங்களுக்கு ஏற்ப அத்துணை பொருத்தமாக வெவ்வேறு நபர்கள் குரல் கொடுத்திருக்கும் பக்குவத்தை வேறெந்தப் படத்திலும் பார்த்திருக்க முடியாது. வரைந்த படத்திலிருந்து மிருகங்கள் குதித்தெழும் கார்ட்டூன்களை வால்ட் டிஸ்னி, திரைப்படமாக எடுக்கத் துவங்கியது 1906-ல். தனது உறுதியான கவனமான படப்பிடிப்பாலும் அபார கற்பனையாலும், உயர்ந்த தரத்தாலும் ‘மிக்கிமெளஸ்’ என்கிற படத்தை அளித்து உலகப் புகழ் பெற்றார். இந்த ‘ஜங்கிள் புக்’ படத்தை எடுக்க 3 வருடகாலமாயிற்று. இது வால்ட் டிஸ்னியின் கடைசி படமாகும்.
டி,எல்.ஆர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.