

ஹலோ…ஹலோ….பேசறது யாருங்க?’ ஓகோ நீங்களா? நமஸ்காரம். ஜானகி ஹஸ்பெண்டு பேசுகிறேன். ஜானகியை கூப்பிடுகிறேன்.
‘ஜானகி பேசுகிறேன். வணக்கம்.’
‘இன்றைக்கு உங்களுக்கு ரிகார்டிங் எந்த ஸ்டூடியோவில் இருக்கிறது? உங்களைப் பேட்டி காண வேண்டும்.’
‘இன்று காலை ஒன்பது மணிக்கு தரங்கிணியில். 11 மணிக்கு ஜெமினியில். கன்னடப்பாட்டு. 12.30-க்கு பிரசாத்தில் இளையராஜா மியூசிக். பகல் 3-30 க்கு ஏவி.எம்.ஆர்.ஆர் தியேட்டரில் சங்கர்-கணேஷ் இசையில் பாடுகிறேன். மாலை 5 மணிக்கு சாரதாவில் மலையாளப் பாட்டு. இரவு 7.30 க்கு மறுபடியும் ஜெமினி ரிகார்டிங் தியேட்டரில் தெலுங்குப் படம்…’ என்று ஒரே மூச்சில் ஜானகி சொன்னதைக் கேட்டதும், எந்த இடத்துக்குப் போவது என்று புரியாமல் திகைத்து விட்டு, ‘சரிங்க, உங்க வீட்டுக்கு வருகிறேன்!’ என்றேன்.
பாடகி ஜானகி வீட்டில் வரவேற்பு அறையில் வைக்கப்பட்டிருந்த பல்வேறு மாநிலங்களில் வழங்கிய பரிசுப் பொருள்கள், பாராட்டுப் பத்திரங்கள், விசேஷ விருதுகள் ஆகியவற்றின் நடுவே இந்தியாவின் சிறந்த பாடகிக்கான ஜனாதிபதியின் பரிசும் கம்பீரமாகக்காட்சி அளித்துக் கொண்டிருந்தது. ஜானகி வாங்கியிருந்த பரிசுப் பொருள்களை பார்க்கவே அரை மணி நேரம் ஆயிற்று!
‘ராமு, நான் ரெடி’ என்றார் ஜானகி. தன் கணவரை ‘ராமு’ என்று தான் கூப்பிடுகிறார். காரில் ஏறிக் கொண்டு அருணாசலம் ஸ்டூடியோவில் உள்ள தரங்கிணி பாடல் பதிவு கூடத்துக்குச் சென்றோம். பின்னணி பாடகர் ஜேசுதாஸுக்குச் சொந்தமான பாடல் பதிவுக் கூடம் தரங்கிணி. ‘எனக்கு ஓய்வு இருக்கும் பொழுது உங்கள் கேள்விகளைக் கேளுங்கள். பதில் சொல்லுகிறேன்’ என்று ஜானகி முன்கூட்டியே கூறிவிட்டதால், காரில் போய்க் கொண்டிருக்கும் பொழுதே கேட்ட கேள்விகளுக்குப்பதில் சொல்லிக் கொண்டே வந்தார்.
‘நடிக, நடிகைகளிடம் கால்ஷீட் வாங்குவது போல உங்களிடமும் முன் கூட்டியே வாங்கிவிடுகிறார்களா?’
‘படத்தின் ஆரம்ப விழாப் பூஜைப் பாடல்களை மட்டும் ஒரு வாரம் முன்பு சொல்லி விடுகிறார்கள். மற்ற எல்லாப் பாடல்களும் முதல் நாள் இரவுதான் சொல்கிறார்கள். சிலசமயம் 11 மணிக்குப் பாடல் பதிவு என்றால், காலை 8 மணிக்குப் போன் பண்ணிக் கூப்பிடுகிறார்கள். போனதும் உடனே பாடணும்..சில சமயம் பொதுக்கூட்டத்துக்கு அரசியல் தலைவர்கள் வந்து பேசிவிட்டுப் போகிறார்களே அது போல!’ (சிரிக்கிறார்).
‘எந்தெந்த மொழியில் பாடியிருக்கிறீர்கள்? இதுவரையில் எத்தனை பாடல்கள் பாடியிருக்கிறீர்கள்?’
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி, செளராஷ்டிரா, சமஸ்கிருதம், ஆங்கிலம், சிங்களம், கொங்கிணி, துளு ஆகிய பதினான்கு மொழிகளில் பாடியிருக்கிறேன். வேறு எந்த மொழியிலாவது பாட வேண்டும் என்றாலும் பாடுவேன். இதுவரையில் 6000 பாடல்களுக்கு மேல் பாடியிருக்கிறேன்!’
‘பிற மொழியில் பாடும்பொழுது எந்த மொழியில் எழுதி வைத்துக் கொண்டு பாடுவீர்கள்?’
‘தமிழில் பாடும் பாடலைத் தமிழிலேயே வைத்துக் கொண்டும், தெலுங்கில் பாடும்பொழுது தெலுங்கிலும், இந்தியில் பாடும் பொழுது இந்தியிலும், மற்ற மொழிகளில் பாடும் பொழுது தெலுங்கிலும் எழுதி வைத்துக்கொண்டு பாடுவேன்!’
‘வெளியூர்களுக்குக் கச்சேரிக்குப் பாடப் போகும் பொழுது உங்களை முன்கூட்டியே தெரிந்து கொண்டு ரசிகர்கள் பேசுகிறார்களா? அல்லது நீங்கள் மேடையில் பாடிய பிறகு நீங்கள் தான் ஜானகி என்று தெரிந்து கொண்ட பிறகு தான் பேசுகிறார்களா?’
‘வெளியூர்க் கச்சேரிகளுக்கு நான் இப்பொழுதெல்லாம் அதிகமாகப் போவதில்லை. காரணம் எனக்கு என்னுடைய குரல் தான் மூலதனம். வெளியூர்களுக்குப் போவதால் சீதோஷ்ண நிலைகளீனால் குரல் மாறித் தடித்துப் போய்விடுகிறது. மறுநாள் படத்தில் பாடும் வாய்ப்பும் போய்விடுகிறது.’
‘உங்களுக்குக் கிடைத்திருக்கும் பாராட்டுதல்களில் மறக்க முடியாதது எது?’
‘பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்பு பம்பாய் சண்முகானந்தா சபாவில் – நானும் பி.பி.ஸ்ரீநிவாஸும் கச்சேரி செய்தோம். அப்பொழுது பிரபல நடிகர் பிருதிவிராஜ், மிகவும் நிதானமாக ஜானகி பாடுகிறார், அங்க அசைவு இல்லாமல், உதட்டு அசைவு கூட இல்லாமல் இனிமையாகப் பாடுகிறார். பாடும் பொழுது குரல் எங்கிருந்து வருகிறது என்று கூடக் கண்டுபிடிக்க முடியாமல் பாடும் ஜானகியைப் போல் வேறு யாரையும் நான் இதுவரையில் பார்த்ததே இல்லை!’ என்று பாராட்டினாரே அது.’
‘கச்சேரியில் நீங்கள் பாடும் பொழுது ரசிகர்கள் உங்களை எந்தப் பாட்டுப் படுமாறு கேட்கிறார்கள்?’
‘அன்னக் கிளியே உன்னைத் தேடுதே, மச்சானைப் பாத்தீங்களா?, செந்தூரப் பூவே, ஆகிய பாடல்களை விரும்பிக் கேட்கிறார்கள். கேரளா, ஆந்திராவுக்குப் போனபோது அங்கெல்லாம் கூட இந்த மூன்று பாடல்களையும் விரும்பிக் கேட்டார்கள். தமிழில் செந்தூரப் பூவே எப்படிப் புகழ் பெற்றதோ அதே மாதிரி தெலுங்கு பதினாறு வயதினிலே படத்தில் சிரிமல்ல பூவா என்ற பாடல் புகழ் பெற்றிருக்கிறது.’
பின்னணி பாடப் படவுலகுக்கு வருவதற்கு முன் தன் வாழ்க்கையில் அனுபவித்த தொல்லைகளைப் பற்றி உருக்கமாகக் குறிப்பிட்டார் ஜானகி.
‘என் வீட்டில் இருந்தபடியே லதா பாடிய பாடல்களைக் கேட்டுக் கேட்டுப் பாடப் பழகிக் கொண்டேன். அப்பொழுது பாடலைக் கேட்பத்ற்கு எங்கள் வீட்டில் ரேடியோ கிடையாது. ரேடியோ வாங்க வசதியும் இல்லை. அதே மாதிரி ஆஷா பாடுவது போலப் பாடிப் பாடி பழகி வந்தேன். 1957-ல் ஏவி.எம்.மின் பாடல் நிலையத்தில் சம்பளத்துக்குச் சேர்ந்தேன். சம்பளப் பற்றாற்குறை காரணமாகச் சிரமங்கள் அதிகமாகவே, படவுலகுக்கே முழுக்குப் போட்டு விட்டுப் போய்விடலாம் என்று தோன்றிய பொழுது தான் ‘கொஞ்சும் சலங்கை’யில் சிங்கார வேலனே என்ற பாடலைப் பாட வாய்ப்பு வந்தது. அது ஹிட் ஆகவே வசந்தம் வீசத் தொடங்கியது. இதுவரையில் மூன்று முறை திருச்செந்தூர் சென்று இருக்கிறேன். மாதா மாதம் திருசெந்தூரில் அர்ச்சனை செய்து பிரசாதம் வந்து கொண்டிருக்கிறது.’
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.