

பத்திரிகை சினிமா வட்டாரங்களில் இந்த இரண்டு பேரைப் பற்றிக் குறிப்பிட்டால், ‘ஓ’ அவர்களா? அசகாயச் சூரர்கள்!’ என்று ஒருமித்த குரலில் ஒப்புக் கொள்வார்கள்.
மூத்தவர் சித்ரா ராமு, இளையவர் சித்ரா லட்சுமணன்.
ஆரணி இவர்களுக்குச் சொந்த ஊர் என்றாலும் ‘யார் நீ?’ என்று சென்னையில் இவர்களை யாரும் கேட்டுவிட மாட்டார்கள்! அந்த அளவிற்குப் புகழ் பெற்றவர்கள்.
ஆளுக்கு ஒரு ஸ்கூட்டரில் ஏறிக் கொண்டு, நகரில் சினிமா வட்டாரங்களில் புகுந்து புறப்படுவார்களேயானால், ஏதோ ஒரு விழா எடுக்க அல்லது கலைஞர்களுக்கு விளம்பரம் தேடித் தர உருப்படியான செயலில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று அர்த்தம்.
ஆரம்ப காலத்தில் ‘சித்ரா’ என்ற பெயரால் விளம்பர நிறுவனம் ஒன்றைத் தொடங்கிய ராசி நல்ல ராசியாயிற்று. சினிமாக் கலைஞர்களுக்கிடையே செல்வாக்கைத் தேடிக்கொள்ள அந்த நிறுவனம் காரணமாக இருந்ததால், சகோதரர்களிடம் முன்னாலும் ‘சித்ரா’ முன்னிடம் வகித்துக் கொண்டது.
அண்ணன் ராமு பேச்சில் வல்லவர். நாக்கில் எப்போதும் நகைச்சுவை நிலவி நிற்கும். எந்த சினிமாப் படத் தயாரிப்பாளரிடம் சற்று நேரம் பேசினாலும் அவரைத் தன்வயப்படுத்திவிடும் திறமையான நாவன்மை படைத்தவர். அதனால்தான் அமரர் சாண்டோ சின்னப்பா தேவரின் ஆசியோடு அவர் தொடங்கியிருக்கும் ‘ராம் பப்ளிசிடி’ சிறப்புற்றுத் திகழ்கிறது.
தம்பி லட்சுமணன், தன் அழகிய கூந்தலையும் தோள்பட்டைகளையும் ஒரு தடவை அசைத்தால் போதும், சினிமா கலைஞர்கள் அவரைச் சுற்றிச் சுற்றி வருவார்கள். அவர்களின் முன்னேற்றத்திற்குத் தேவையான விளம்பரங்களை எப்படியெல்லாம் செய்யலாமென்று கலந்து ஆலோசிக்குமளவிற்கு நட்பு கொண்டுவிடுவார். அதோடு பத்திரிகையாளரும் கூட. தன் பேனாவின் வலிமையினால் சினிமாக் கலைஞர்கள் பற்றி அவர் தக்க ஆதாரங்களோடு எழுதுவதும், அவர்களுக்கு பேருதவி புரிந்து வருகிறது.
ராமுவும் லட்சுமணனும் எந்தப் பிரபல நட்சத்திரங்களையும் எளிதில் தங்கள் திறமையான திட்டங்களினால் வளைத்துப் போட்டுவிடுவார்கள். புதுவிதமாக எப்படியெல்லாம் விளம்பரங்கள் செய்ய வேண்டும் என்றெல்லாம் இந்தச் சகோதரர்கள் ஐடியாக்கள் சொன்னால் அவர்கள் ‘ஓகே’ என்பார்கள்.
ஒரு படம் தொடங்கப்படுவதற்கு முன்னால் அதற்குரிய கதை பற்றி ‘டிஸ்கஸ்’ செய்யப்படும் இடங்களில் அண்ணனும் தம்பியும் ஆஜராகியிருப்பார்கள். பளிச்சென்று பயனுள்ள கருத்துக்களைச் சொல்வார்கள். அது படத் தயாரிப்பாளருக்குப் பேருதவியாகவும் புதுவிதமாகவும் இருக்கும். அதனால் தான் இந்த ராமுவையும் லட்சுமணனையும் படவுலக மனிதர்கள் பலர் விரும்பித் தேடுகிறார்கள்.
கமலஹாசன், பாக்கியராஜ், ஜெய்சங்கர், டைரக்டர் பாரதிராஜா, மகேந்திரன், பஞ்சு அருணாசலம் ஆகியோர் இவர்களுக்கு உற்ற நண்பர்கள். கதை விவாதஙக்ள் நடக்கும் இடங்களில் ‘சித்ரா ராமு இருந்தால் இந்தச் சிக்கலைத் தீர்த்து வைப்பாரே’ சித்ரா லட்சுமணன் இருந்தால் பளிச்சென்று பத்து வரிகள் எழுதி வைப்பாரே? என்றெல்லாம் அவர்கள் அறிந்து கொண்டிருக்கிறார்கள்.
பத்திரிகையாளர்கள் கலந்து கொள்ளும் விழாக்களில் சில நல்ல கருத்துக்களை சொல்வதோடு கவர்ச்சிகரமான சினிமா ஸ்டில்களை வைத்து அனுப்பி, ‘இது சிறந்த சித்ரா ஏற்பாடு’ என்று கூறும்படி செய்துவிடுகிறார் தம்பி லட்சுமணன்.
ராமனும் லட்சுமணனும் இருக்குமிடம் அயோத்தியாக இல்லாவிட்டாலும் மேற்கு மாம்பலத்தைச் சார்ந்த அயோத்யா மண்டபத்தைச் சுற்றிக் கொண்டு போகும் ஓரிடமாக இருக்கிறது. அவர்கள் எந்த இடத்தை எப்படிச் சுற்றிக் கொண்டு போனாலும் அவர்களைச் சுற்றி நட்பு உறவு கொள்ளும் கலைஞர்களின் எண்ணிக்கை மிகுந்து கொண்டே போகிறது.
உருப்படியாக கலைத்துறைக்குத் திறம்படப் பணிபுரியும் இவர்கள் பாராட்டுக்குரியவர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.