நடிகை அருணாவின் திரைப்பிரவேசம்!

கல்லுக்குள் ஈரம் படத்தில் டைரக்டர் பாரதிராஜாவின் காதலியாக நடித்தவர் அருணா சென்னைவாசியல்ல – ஹைதராபாத்தில் இருப்பவர். அவர் அண்மையில் சென்னைக்கு வந்திருந்தபோது –
நடிகை அருணாவின் திரைப்பிரவேசம்!
Published on
Updated on
1 min read

கல்லுக்குள் ஈரம் படத்தில் டைரக்டர் பாரதிராஜாவின் காதலியாக நடித்தவர் அருணா சென்னைவாசியல்ல – ஹைதராபாத்தில் இருப்பவர். அவர் அண்மையில் சென்னைக்கு வந்திருந்தபோது –

‘சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்குச் சிறிதும் இல்லை. இன்னும் சொல்லப் போனால் நான் அதிகமாக சினிமாவே பார்த்ததில்லை. ஹைதராபாத்தில் ஸ்கூல் பைனலை முடித்தவுடன் காலேஜ் அட்மிஷனுக்காக அலையாய் அலைந்து கொண்டிருந்தேன். அப்படித்தான் ஒரு நாள் காலேஜ் அட்மிஷனுக்காக ஒரு பெண்கள் கல்லூரியில் இண்டர்வியூ முடிந்து சாலையில் நடந்து கொண்டிருந்தேன். திடீரென்று திரும்பிப் பார்த்தேன். ஒல்லியாக, கண்ணாடி அணிந்த மனிதர், முன்பின் பார்த்திராத ஒருவர் என் பின்னால் வந்து கொண்டிருந்தார். நான் எங்கெல்லாம் திரும்பினேனோ அங்கெல்லாம் அவர் திரும்பி நடந்து வந்து கொண்டிருந்தார்.

பதைபதைப்புடன் என் வீட்டிற்குள் சென்றுவிட்டேன். அந்த மனிதரும் என் வீட்டிற்குள்ளே வந்துவிட்டார். என் தந்தையைப் பார்த்து ஏதோ பேசிக் கொண்டிருந்தார். என் தந்தையும் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். அவர்கள் என்ன பேசுகிறார்க்ள் என்று எனக்குச் சரியாகப் புரியவில்லை.

சிறிது நேரத்தில் என் தந்தை என்னிடம் வந்து, ‘நீ சினிமாவில் நடிக்க விரும்புகிறாயா? அவர் பெயர் நிவாஸ். உன்னை, தான் தயாரிக்கும் படத்தில் நடிக்க அழைக்கிறார்’ என்றார். நான் மறுத்துவிட்டேன்.

பிறகு அவர் மிகவும் வற்புறுத்தினார். திடீரென்று என் வாழ்க்கையில் ஏற்படுகிற மாறுதலை ஏற்றுக் கொள்ள ஆரம்பத்தில் தயங்கிய நான், பிறகு நடிக்கச் சம்மதித்தேன்.

சென்னையில் வந்து அவரைப் பார்த்தேன். ‘நான் மட்டும் பார்த்தால் போதாது; இன்னொருவர் ஓகே சொல்ல வேண்டும் என்றார் நிவாஸ்.

அந்த இன்னொருவர்தான் பாரதிராஜா.

ஹோட்டல் அட்லாண்டிக்கில் அந்தச் சந்திப்பு நடந்தது. நிவாஸுடன் பாரதிராஜாவை அங்கே சந்தித்தேன். என்னைப் பார்த்ததும் அவரும் ஓகே என்று சொல்லிவிட்டார். பிறகு? தொடர்ந்து படப்பிடிப்பு.

முன்பின் தெரியாத, அறிந்திராத துறையில் நான் சந்தித்த அனுபவங்கள் புதுமையாகவும், பசுமையாகவும் இருக்கின்றன.

வசனங்களைச் சொல்லிக் கொடுத்ததிலிருந்து, நடிப்பு, முகபாவங்கள் வரை, நிவாஸும், பாரதிராஜாவும் சகோதரர்களைப் போலப் பழகி, எப்படி அமைய வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தது என் நினைவை விட்டகலாது.

-கே.வரதராஜன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com