அழுத-கண்ணீர் : கு. முருகேசன்

Updated on
1 min read

பிரசவத்தில்
தாய் அழுகிறாள்
சேய் அழும் வரை!

அழுகையும் கண்ணீரும்
ஒவ்வொரு குழந்தைக்கும்
தாய் கொடுத்த முதல் சொத்து!

செலவழித்தது போக – மீதமுள்ள
அழுகையும் கண்ணீருமே
மரணத்தின்போது மற்றவரிடம்
விட்டுச் செல்கிறோம்!

அழுகையே
மனிதனின் முதல்
உணர்வு!

வாழ்க்கை!
அழுகையில் தொடங்கி
அழுகையில் அடங்குகிறது!

அழுகை
மனிதனின் மனக்குளியல்
உடலைக் கழுவ
தண்ணீர்க் குளியல்!

உள்ளதைக் கழுவ
கண்ணீர் குளியல்!

காட்சியில் அழுபவன்
நடிகனாகிறான்!

கட்சியில் அழுபவன்
மந்திரியாகிறான்!

கண்ணீர்!
கண்ணில் தொடங்கி
கன்னத்தில் வழிந்தோடி 
கடலில் கலக்காத
உப்பு நதி!

காதலிக்கும் வயதில்
கவிதை வந்தால்
காதலின் தொடக்கம்
என்று பொருள்!

காதலிக்கும் வயதில்
கண்ணீர் வந்தால்
காதலின் அடக்கம்
என்று பொருள்!

கண்ணீர் ஓர் ஆயுதம்!
தொழுகை சரிசெய்யாததைக்  கூட
அழுகை சரிசெய்து விடுகிறது!

ஒவ்வொருவருக்கும்
சொத்து சம்பாதிப்பதைவிட
கடினம்,

தன் மரணத்திற்காக
கண்ணீர்  சிந்தும்
மனிதர்களை
சம்பாதிப்பதுதான்!

கண்ணீரும்
ஓர் உலகப் பொதுமறை!
இறைவன்
எல்லோர்க்கும் பொதுவாக
கண்ணீர் கொடுத்தான்!

ஏன்?
சிலருக்கு மட்டும்
கண்ணைப் பறித்தான்? 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com