வேலி தாண்டிய காற்று : பாவலர் கோ. மலர்வண்ணன்

Updated on
1 min read

புயலென்றால் நெஞ்சத்தில் அச்சந் தோன்றும்!
    புரட்டிவிட்டுப் போகும்;பே ரழிவைச் செய்யும்!
வயல்வெளியில் செழித்திருக்கும் வாழை, தென்னை
    வரப்புகளில் வளர்ந்திருக்கும் மரங்க ளெல்லாம்
அயலயலாய்ச் சாய்த்துவிட்டுக் கடந்து போகும்!
    அடுத்திருக்கும் பொருள்களையும் புரட்டிப் போடும்!
செயலற்றுப் போம்படிக்குச் செய்யுங் காற்றின்
    செயலொழிக்க யாரால்தான் முடியும் சொல்வீர்?!

சென்னையிலே பெருவெள்ளம் பெருகி வந்து
   செய்துவிட்ட துயரங்கள் அகலா முன்னர்
இன்றைக்குப் புயலாக 'வர்தா' வந்தே
    இன்னலினைத் தந்துநிற்கும் காட்சி, 'அந்தோ!
என்றென்றும் சென்னையில்வாழ் மக்கள் துன்பம்
    எதிர்கொள்ளல் கேட்டுவந்த சாப மாமோ?!'
என்றன்றோ மனத்துக்குள் நினைக்கத் தோன்றும்?!
    இவ்வமயம் மாந்தநேயம் ஒன்றே காக்கும்!

நிழல்தந்து வெம்மையினைப் போக்கி நின்ற
    நெடுமரங்கள் கணக்கின்றிச் சாய்தல் கண்டோம்!
அளவில்லாக் கம்பங்கள் தரையில் சாய்ந்த
    அவலத்தால் நகரில்மின் சாரம் இல்லை!
செலவுக்குப் பணத்தாள்கள் கிட்டா வேளை
    செலவுமிக்குத் திக்குமுக்காய்த் தவிக்கும் சோகம்!
நலமழிக்கும் மழைநீரால் எங்கும் தொல்லை!
    நடாபுயலே நல்லதெனச் சொல்லக் கேட்போம்!

வேலிதாண்டு கின்றகாற்றை வேண்டாம் என்றால்
    விட்டுவிட்டுச் சென்றிடுமா? கடலூர் தன்னைக்
காலிசெய்த தானேபுயல் தாண்ட வத்தைக்
    கனவினிலும் மறப்பார்யார்?! சூழ்ந்து நிற்கும்
ஆழியிடை மையங்கொள் புயலை நன்றாய்
    ஆய்ந்துரைக்கும் வானிலையை மதித்து மக்கள்
வாழின்துயர்க் கடலினிலே தவித்தி டாமல்
    வாழ்ந்திடலாம்! இயற்கையினை வெல்வார் உண்டோ?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com