கடலன்னை என்றேதான் வணங்கி வந்தோம்!
கதிரவனின் அழகினில்தான் மயங்கி நின்றோம்!
கொடுக்கின்ற வள்ளலென நினைத்த போதே
கொடுங்கோலன் செயலாய் மாறி பாய்ந்தாய்!
தடுத்திடத்தான் முடியுமாமோ? உந்தன் வேகம்
தவிக்கின்றோம் கண்ணீரோடு நெஞ்ச சோகம்!
விடுகதையின் புதிர்போல ஒளித்து வைத்தே
வேகமாய் வீசித்தான் சாய்த்தே விட்டாய்!
சுகமான தென்றலைத்தான் வீசி வந்தாய்!
சொர்க்கமாய் எம்மையே தீண்டி வந்தாய்!
அகமகிழ்ந்து அளவளாவி இருந்த போதே
ஆவேச கோபத்தோடு ஏனோ பாய்ந் தாய்!
புகலிடமாய் உம்மையே நினைத்த போதே
போர்க்களமாய் கரையை மாற்றி விட்டாய்!
புகுந்தேதான் சேற்றினையே வாரி வாரி
புதைகுழியில் ஏன்தான் தள்ளி விட்டாய்!
அன்புக்கு அன்னையென பேரும் உண்டு
அன்னையே என்றேதான் வணங்கி நின்றால்
அன்பினையே மறந்தாயோ? ஏன் தான்
அடிமனதில் கோபத்தை தேக்கி வைத்தாய்!
கண்டிக்கும் உரிமையும் உனக்கு ண்டே!
கொடுரமாய் ஏனோ? தண்டனை தந்தாய்!
உன்-கரையை தேடித்தான் வந்து நின்றால்
ஓடத்தான் செய்திட்டாய் தர்ம மாமோ ?
அமைதியாய் இருக்கின்றாய் என்றே எண்ணி
அழகினில்தான் மயங்கியே நின்ற வேளை
அமைதியாய் உள்ளுக்குள்ளே பொங்கி யெழுந்தே
அஞ்சித்தான் எங்களையே ஓட விட்டாய்!
பொறுமையின் சிகரமென்று உமை அழைக்க
போர்க்குணமாய் நீஏனோ மாறி நின்றாய்!
சிறுபிழைகள் ஏதேனும் செய்திருந் தால்
சேயென்றே மன்னித்து பிழை பொறுப்பாய்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.