பூமணக்கும் சோலை தன்னில்
பூவடிக்கும் தேனே புதையலாகும்
நா-மணக்க சமைக்கின்ற நாயகியின்
நல்ல கைப்பக்குவமும் புதையலாகும்
வாரிவாரி வழங்குகின்ற வள்ளல்
வழங்குகின்ற கரங்களும் புதையலாகும்
மாரியாக மாறித்தான் பொழிந்திடும்
மேகத்தின் கூட்டமும் புதைய லாகும் !
பள்ளியிலே படிக்கின்ற பிள்ளைக்கு
பெறுகின்ற மதிப்பெண்கள் புதையலாகும்
பள்ளியறை பஞ்சணையில் தம்பதியர்
பார்க்கின்ற பால்நிலவும் புதையலாகும்
அள்ளியே அணைத்து அன்பொழுக
அன்னையின் முத்தங்களும் புதையலாகும்!
துள்ளித்திரியும் மழலைகளின் முகத்திலே
தோன்றிடும் புன்னகையும் புதையலாகும்
பசுமைமிகு வயல்வெளியில் தலைசாய்ந்த
பக்குவமான நெற்கதிரும் புதையலாகும்
பசுக்கள் தந்திடும் வெண்மை பாலதனில்
பல்சுவை பொருட்களுமே புதையலாகும்
பசுஞ்சோலை காற்றினிலே தவழ்ந்தே
படர்ந்திடும் இசையும் புதையலாகும்
அசுகவி கம்பனவன் கற்பனையில்
அருந்தமிழ் கவிநயமும் புதையலாகும்!
ஆன்றோர்கள் அருந்தமிழில் வடித்திட்ட
அறிவுமிகு தமிழ்நூல்கள் புதையலாகும்!
சான்றானோய் வளர்வதற்கு தலைவர்தம்
சரித்திரங்களும் அறிவான புதையலாகும்!
தீண்டுமின்பம் தீயினிலே கண்டுணர்ந்த
தேன்தமிழ் பாரதியும் நமது புதையலாமே!
தோன்றில் புகழோடு தோன்றுக என்ற
தேன்-குறளமுது மினிய புதையலாமே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.