பச்சை நிலமெலலாம் பழுப்புநிலம் ஆனதென்ன
பாலாறு போலயின்று காவிரியும் வறண்டதென்ன ?
உச்சநீதி மன்றம்தன் தீர்ப்புதனைத் தந்திட்டும்
ஒருசொட்டு நீர்தரவும் கன்னடியரர் இணங்கவில்லை!
பிச்சைதனைப் போடுதல்போல் கன்னடியர் எண்ணுகிறார்,
பிளவுபடும் நாடிதுவும் இதுதொடரும் போதினிலே!
நிச்சயமாய் இதுதன்னை நாம்சகிக்கத் தான்தகுமோ,
நீதிமன்றத் தீர்ப்புதன்னை மதிக்காமல் இருப்பதுவோ ?
பச்சை வயல்களை எங்கெங்கும் நாட்டினில்
பார்க்கின்ற வகைதனிலே,
பலப்பல ஆறுகள் இணைந்திடக் காண்பதே
பவித்திரம் என்றாகுமே!
கச்சித மாகவே ஆறுகள் இணைந்திடக்
காண்பதே நம்கடமை;
கருத்துடன் செயலபட்டு வெற்றியைப் பெற்றுநம்
காலத்தை வென்றிடலாம் !
நிச்சயம் இணைப்பெலாம் நடந்திட வேண்டும்
நிலைத்தநல் வளமைபெற;
நெஞ்சுரம் தனைக்கொண்டு செயல்தனில் இறங்கிட
நிச்சயம் முடித்திடலாம்!
இச்சகந் தனில்நாம் தன்னிறை வடைவோம்
இல்லைபசி பிணியென்போம் ;
இந்திய நாடிதன் வளமைக்கும் பெருமைக்கும்
இதுவே வேண்டுமென்போம் !
பார்க்கப் பார்க்கநல்ல பரவசம் தருவதும்
பச்சை வயல்களன்றோ,
பாரத நாடிதன் உயிர்மூச் சாவதும்
பயிர்தொழில் தானல்லவோ ?
ஊர்யெங்கும் வயல்கள் உண்டென்றப் போதிலும்
உண்டாமோ நீர்வளமை?
உரியநற் காலத்தில் நீரதும் இல்லையென
உயருமோ விளைச்சலதும்?
கூர்கெட்டோர் தானிதை உணர்ந்திடா திருப்பதும்
கொஞ்சமும் கவலையின்றி;
கோதாவரி நீரெலாம் கடல்தனில் கலப்பதும்
கொடுமையே தானல்லவோ?
நீர்வளம் தானெந்த நாட்டுக்கும் முதல்வளம்
நிலைத்தநல் மூலதனம் ;
நீர்சென்று கடல்தனில் கலக்கா திருந்திட
நினைக்கட்டும் அரசாங்கம் !
ஆழமானக் கிணரெங்கும் இல்லாநன் நாடு
ஆனாலும் காவிரியால் வளம்கொழித்த நாடு!
வாழவைக்க காவிரியாள் வருடமெலாம் வருவாள்
வனிதையவள் தமிழகத்தின் மருமகளென் றாவாள் !
மோழைகளே நீர்வரத்தை தடுத்திடுவ தெல்லாம்,
முப்போகம் வளைநிலங்கள் கதியென்ன ஆகும் ?
சோழநாட்டின் பெருமையதும் சுணக்கமுறத் தகுமோ,
சுதந்திரத்தைப் பெற்றிட்டதன் பலனுமிது தானோ ?