பச்சை நிலம்: கவிஞர் டி.கே. ஹரிஹரன்

Updated on
1 min read

பச்சைப்பசேலென்றிருக்கும்
விளைநிலத்தைக்
காண்பிக்கச் சொன்னாள் மகள்.
நகரச் சந்தடியிலிருந்து
தொலைதூரம் அழைத்துச்செல்ல
இருசக்கர வாகனத்தில் பயணம்.

கண்ணுக்கெட்டிய தூரம்
கான்கிரீட் கலவைகளால்
பின்னப்பட்ட கட்டடங்கள்.

மருந்துக்கும் சாலையிருபுறம்
மரமில்லை,செடியில்லை,கொடியில்லை
மாடிகளில் தொங்கும் பிளாஸ்டிக் குரோட்டன்ஸ்.

விதவித வண்ணங்கள் பூசப்பட்ட
கலைநயமிக்க கட்டடங்கள்
இயந்திரத்தனமாய் விரையும் மனிதர்கள்.

காலைமுதல் மாலைவரை
திக்குகள் பரவித் தேடியும்
அகப்படவில்லை பச்சைநிலம்.

மகள் கண்களில் ஏமாற்றம்
யார்கொணர்வர் பெருமாற்றம்
சிந்தையில் ஆழ்ந்த மனம்.

அரைத்தூக்கத்திலிருந்த என்னைத்
தட்டியெழுப்பினாள் மகள்,
தாள் ஒன்றை நீட்டினாள்.

கண்ணைக் கசக்கிக் கண்டேன்
கச்சிதமாய் சாலையிருபுறமும்
பச்சைநிலம் சூழ்ந்த வண்ணச் சித்திரம்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com