குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல்-அன்று
முன்னோர் வகுத்த நிலமெல்லாம்
அளவு மீறிச்சுரண்டியதால்- இன்று
அழியும் நிலைக்கு வந்ததுவாம் .
மலைகள் வெடியால் தகர்ந்தன-அவை
மயானக் குவாரிகள் ஆயின .
மக்கள்வாழ் விடம் அழிந்திட-காற்றும்
வானமு ம் மாசால் நிறைந்தன..
மருத நிலங்கள் வறண்டன-ஈரம்
வற்றி வெடிப்பால் துவண்டது;
குளிர் பான நிறுவனம் நீரூற்றை- பகல்
கொள்ளையாய் அடித்து சிதைத்தது.
கடலில் கழிவுகள் கலந்தன-அதனால்
கடலோடி வாழ்வும் குலைந்தது ;
மீன்வளம் முதலாம் கடற் செல்வம்-இனி
மீட்டிட வழியின்றி மாய்ந்தது.
பச்சை நிலமாம் முல்லையழித்து –கட்டும்
இச்சை மனிதர் குடியிருப்பால்
விலங்குகள் வாழ்விடம் அழிந்தது –காட்டின்
விலங்கினம் ஒவ்வொன்றாய் மாய்ந்தது.
மரங்கள் நட்டு நீரூற்றுவோம் –பச்சை
வனங்களை வளர்த்து காத்திடுவோம்
மழை வளம் பெற்று மனமகிழ்வோம் –நல்
உழவர் மகிழ நாம் உளம் மகிழ்வோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.