சூரிய தாகம்: சென்னிமலைதண்டபாணி

Updated on
1 min read

சுடுபாலைக் கொட்டிவைத்த நெடிய வானில்
 சுற்றிவரும் சூரியனின் தாகம் தீர்க்கக்
கொடுப்பதற்கு நம்மிடத்தில் என்ன உண்டு?
 கொதிகலனாய் வயல்வெளிகள் மாறி நிற்க
நடுகின்றார் நாற்றுகளை வியர்வை சிந்தி….
 நம்மக்கள்..நன்மக்கள்.!.வியர்வைச் சொட்டைத்
தொடுகின்ற சூரியனோ தாகம் தீரச்
 சுற்றுகிறான் மாலைவரை களைப்பே இன்றி.

கடல்பார்த்து நகர்ந்தாலும் பசுமை போர்த்த
 காடுகளைப் பார்த்திங்கே நடந்தா லும்தன்
உடலுக்கு வலிமைவர வேண்டு மென்றால்
 உழைப்பாளன் வியர்வையிலே நணைய வேண்டிச்
சுடசுடத்தான் சூரியனும் சுற்று கின்றான்
 சோம்பலுக்கு விடைகொடுத்த உழவன் மேனி
தடவிவிட்டு நகர்கின்றான்… அந்தி யென்னும்
 தடம்பார்த்து நடக்கின்றான் தாகம் தீர்ந்து.

விடியலிலே விழிதிறந்து தகத கக்கும்
 விரல்களிலே ஒளிக்காட்சி வரைந்து வைக்கும்
நொடிதவறாச் சூரியனின் வருகை  எந்த
 நுட்பத்தைச் சொல்கிறது? வியர்வை சொட்டப்
படியளக்கும் எளியவனின் வாழ்வை இந்தப்
 பார்மதிக்க மறந்ததெனில் எந்த நாளும்
விடிவில்லை உலகிற்கு..தனது தாகம்
 விலகுவதும் இல்லையெனும் உண்மை தானே?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com