வெற்றி முரசு: கவிஞர் கே. அசோகன்.

Updated on
1 min read

ஐயிரண்டு திங்கள் கழிந்த பின்னே
       அழகாய்தான் மழலையை ஈன்றெ டுத்து
கையிரண்டில்  ஏந்தியே தாலாட்டு பாடி
       கண்ணுறங்க செய்துதான் அழகு பார்த்து
மைவிழிகள்  தூக்கத்தில் சோர்ந்த போதும்
       மெய்வருத்தி என்றும் காத்து நின்றே
தெய்வமாய் காத்திட்ட அன்னை முன்னே
       நல்பிள்ளை கொட்டிடுவான் வெற்றி முரசே!

தான்படும் துயரமெல்லாம்  ஒளித்து வைத்து
      ஊன்மறந்து ஓயாமல்  உழைத்தே தான்
உறக்கத்தை  சற்றே தொலைத்து விட்டு
     வீண்செலவு ஏதுமே செய்தி டாமல்
வெற்றிதனை குறிக்கோளாய் கொண்டே
     விடாமுயற்சி செயல்களில் நாட்டம் காட்டி
தனயன் வாழ்க்கை  செழித்து நிலைக்க
      தந்திடுவார் தந்தையும் வெற்றி முரசே !

கண்ணகியின் கோபம் பெருகி தானே
       காற்சிலம்பு தரையினில் மோதி தெறிக்க
எண்ணற்ற பரல்கள் சிதறி விழுந்தே
       என்-கணவன் கோவலன் கள்வ னில்லை
என்றேதான் நாட்டினாளே வெற்றி முரசு
       என்றென்றும்  கண்ணகியின் வீரம் தன்னை
இன்றுமே புகழ்கின்றோம் அவளின் பெருமை
       இன்தமிழுக்கு அணிசேர்க்கும் வெற்றி முரசே!

உண்மை  பாதையே உயர்ந்த தென்று
       ஒவ்வொரு நாளுமே அதன்வழி சென்று
உண்ணாநோன்பும் உப்பு  சத்தியா கிரகமும்
       உடலிலே அரைமுழத் துண்டுமே யணிந்து
எண்ணற்ற இன்னல் கண்ட போழ்தும்
      இடைவிடா முயற்சியால் இனிய சுதந்திரம்
கண்துயிலும் நேரத்தினிலே காந்தியும் தான்
       காதுகளில் ஒலிக்கசெய்தார் வெற்றி முரசே!                                

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com