அரியாசனம்:  -ரெத்தின.ஆத்மநாதன்,

Updated on
1 min read
அரியாசனம்  ஏற    வேண்டின்
அதற்கென  தகுதி  வேண்டும்!
நல்லோர் வாழ்வில் கூட
நயமாய் அது கிடைப்பதில்லை!
ஆணானப் பட்டோ ரெல்லாம்
அதுவின்றித் தவித்த துண்டு!
சீரான எண்ணங் கொண்ட
சில பேர்க்கேஅது வாய்த்ததுண்டு!
அடுத்தநாள் முடிசூடிக் கொள்ள 
அத்தனையும் தயார் நிலையில்!
கைகேயி விட வில்லையே
கனிவான ராமனுக்கு வழி!
பதினான்காண்டுகள்  பரண் அமைத்து
காடுவாழ்! என்றே அவள்கூற
இனிதான ராமன் ஏக
பரதனுக்கும் இல்லை அரியாசனம்!
துச்சாதன தம்பி போல
நூறு தம்பி துரியோதன னுக்கு!
சகுனியின் பார்வை உண்டு
தக்கோர் துணையு முண்டு!
கர்ணனின் நட்பு முண்டு
கடலெனப் படையு முண்டு!
ஆனாலும் அரியா சனத்தில்
அமர்ந்ததோ அன்பு தருமர்தான்!
நாடே பெரும் எதிர்பார்ப்பில்
நமது ஐயா மூப்பனார்தான்
அடுத்த பிரதம ரென்று
ஆசை யுடன் காத்திருக்க
ஆங்கு நடந்ததோர் மாயம்
ஐ.கே குஜ்ரால் தான்
அடுத்த பிரதம ரென்றே
அறிவித்தார் அனைவரும் ஏற்க!
திரும்பவே முடியாத அளவுக்கு
திகட்டத் திகட்டக் குற்றங்கள்!
பணிவு சிறிது மில்லா
பண்பற்ற வார்த்தை கள்!
முதல்வர் கவர்ன ரையும்
மிரட்டிப் பயமுறுத்தும் தொனி!
அடித்தது நல் ரிவிட்
ஆங்கே நம் உச்ச நீதிமன்றம்!
அரியாசனம் ஏறுவோர் என்றும்
அகத் தூய்மை உள்ளோராக
இருந்திடின் அது தொடரும்
இல்லாதெனின் இடையில் வீழும்!
இதிகாச காலந் தொட்டு 
இன்றுவரை இதுதான் நீதி!
மனிதர்கள் வாழும் வரை 
மகத்துவம் இது ஒன்றுக்கே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com