அரியாசனம்: கவிஞர் கே. அசோகன்

Updated on
1 min read

சித்தார்த்தன் அரியணை துறந்த தாலே
சீர்மிகு புத்தனென்றே புகழ் பெற்றார் !
பத்துதிங்கள் சுமந்தவள் கரு வறையும்
பாரினில்  சிறந்த அரியணை யாம்!
கத்துங்கடல் ஆழத்திலே மூழ்கி யுள்ள
கடற்சிப்பி  முத்துதனின்  அரியணை யாம்!
கானகுயில் இடுகின்ற  மூட்டைக்கு தான்
காகத்தின் கூடே நல்ல அரியணை  யாம்!

நான்குகாற்கள் கொண்டதொரு நாற் காலி
நம்பயனுக்கு நல்லதொரு அரியணை யாம்!
கானகத்தில் உலவுகின்ற  சிங்கத்திற் கோ  
காட்டுகுகை நல்லதொரு  அரியணை யாம்!
வேணுகான இசைலயிப்பில் மூழ்கும் போது
விரல்களுக்கோ நம்தொடையே அரியணை யாம்
நாணமிகு நங்கையர்கள் வாழ்க்கை தன்னில்
நல்குடும்பம் சிறப்பான  அரியணை யாம்!

பதவியென்ற சொல்லதனை கேட்ட வுடன்
பளபளக்கும் அரியணையே முன்னே நிற்கும்
விதவிதமாய் மக்களிடை பேசி பேசி
வேண்டும்பதவி பெற்றுத்தான் அமர்ந்த பின்னே
போதாதென்றே மென்மேலும் பதவி பல
பெறுவதற்கு அரியணைகள் தேடி நிற்பார்!
அதுபடுத்தும் துன்பமெல்லாம் மறந்து விட்டே
அதன்பின்னே ஓடிடும் கலிகால மிதுவே!

முள்கிரிடம் என்றேதான் முணு முணுத்து
மோகத்துடன் அரியணை அமர்ந்த பின்னே
கள்கொடுக்கும் போதையென அதிலே மூழ்கி
கண்மறைக்கும் பேராசை ஆற்றில் நீந்தி
வெள்ளத்திடை சிக்கிய சருகு களென
வீணாக ஆனபின்னே புலம்பி நின்றே
அளவில்லா பணம்புகழ் வந்த பின்னும்
அரியணை தேடிதேடி அலைந்திடு வாரே!  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com