நிலாவிடுதூது: அழகூர். அருண்.  ஞானசேகரன்

Updated on
1 min read

கண்ணியம்  தனையெலாம்  இழந்திட்டும்---கடமை
          கட்டுப்  பாட்டையும்  இழந்திட்டும்,
எண்ணந்  தனிலெந்தத்  தெளிவுமின்றி---கொடிய
          இழிவினை  ஏற்கவும்  துணிந்திட்டார்!
உண்மையை  நேர்மையைக்  காவாத---அந்த
           உலுத்தர்கள்  தமையார்  பொறுத்திடுவார்?
வெண்மதி  நிலவே  அவர்களிடம்---நீசென்று
           விளக்கத்தை  ஊட்டிட  வேண்டுவனே!

மாண்பினை  இழந்திட்டக்  குடிமக்களாய்---கொடிய
           மமதையைக்  கொண்டிட்ட  அரக்கர்களாய்,
காண்கின்ற  ஈனர்கள்  ஆட்சிதனில்---எதனைக்
           கண்டிட்டு  மகிழ்வார்  மக்களெல்லாம்?
வேண்டிய  மட்டும்  சேர்த்திட்டுக்---குலமெலாம்
           விளக்கத்தைக்  கண்டதும்  கேவலமே!
வான்தனில்  நீந்திடும்  வெண்ணிலவே---சென்று
           வகையாய்  அவர்கட்கு  உணர்த்திவிடு!

சிந்திக்க  எந்தவோர்  சிறப்புமில்லை!---நல்ல
           சிறப்புற்றத்  திறன்கள்  எதுவுமில்லை!
வந்திட்ட  ஆட்சிகள்  தன்னாலே---கொண்ட
           வளமையை  இழந்ததே  நாடிதுவும்!
எந்தவோர்  நிலையிலும்  மக்களவர்---இனி
           இவர்களைத்  தேர்ந்திட  மாட்டாரென,
சந்திர  நன்மகள்  நீசென்று ---அந்த
            சழக்கர்க்கு  உணர்த்திட  வேண்டுவனே!

ஊரதே  தூற்றிட்டு  வசைபாட---இந்த
            உலகோர்  கண்டிட்டு  சிரித்துநிற்க,
சீரற்றத்  திறன்தனைக்  கொண்டவரால்---இன்று
            சிறப்பினை  இழந்ததே  இன்னாடும்!
கோர  முகந்தன்னைக்  கண்டுகொண்டார்---மக்கள்
            கொண்டிட்ட  நம்பிக்கை  தனையிழந்தார் !
பூரண  நிலவுந்தன்  திறனறிவேன்---அவர்க்கு
             புத்தியை  ஊட்டிட  வேண்டுவனே!

நலத்திட்டம்  என்னும்  பெயராலே---இந்த
             நாட்டவர்  தமையெலாம்  ஏய்த்திட்டே,
பலப்பலக்  கோடிகள்  கொள்ளையிட்டு---நாடிதும்
             பாழ்படக்  காரணம்  என்றானார்!
குலமதன்  விளக்கம்  தனைக்கண்டார்---இந்தக்
             கொடுமைக்கும்  எல்லையே  கிடையாதோ?
நிலவே  உனைநான்  தூதுவிட்டேன்---சென்று
             நீசர்க்கு  இன்னதை  உணர்த்திடவே!

வெம்புலிக்  காடதே  சிறந்ததென---மக்கள்
             வெம்பிடும்  வகைதனில்  இன்னலுற்றார்!
தம்மின்  குலமெலாம்  விளக்கமுற---மனதைத்
             தறிகெட்ட  வகைதனில்  போகவிட்டு,
கும்மியிட்டு  ஊரிதைக்  கொள்ளையிட்டார்---இந்தக்
             கொடுமையை  மக்கள்  மறக்கமாட்டார்!
அம்புலிநீ  என்சார்பில்  தூதுசென்று---அந்த
              அற்பர்க்கு  உணர்த்திட  வேண்டுவனே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com