தூது போ நிலவே நிலவே
தூயவள் அவளிடம் சொல்லு!
வானினை நிறைக்கும் காதல்
வஞ்சியின் பால் உள்ளதென்று
காதுக்குக் கலங்க மின்றி
கனிவுடன் எடுத்துச் சொல்லு!
'மதியினும் மிகு ஒளி அவள்
முக வதனத்தில் உள்ளதென்று'
அன்று நான் சொன்னதை நீ
அடி மனத்தில் நிலை நிறுத்தி
பொறாமை கொண்டு எங்கள்
புனித த்தைக் கெடுத்திடாதே!
வளர்வதும்... தேய்வதும்...
வான் நிலவே உன் வாடிக்கை!
என்னவள்...வதனமோ...
என்றைக்கும் பௌர்ணமிதான்!
கண்ணவள் எனக்குந் தான்
கட்டாயம் இதை நீ சொல்லு!
ஒருவித த்தில் எனக்குப் பயம்
உன்னைத் தூது விடுவதற்கு!
'உன்னிலும் பேரழகி என்
உயர்வான காதலியென்று'
சொன்னதை எண்ணி நீ
எம்காதலைச் சொதப்பி விட மாட்டாயே!
வானத்து நிலவு நீ...
பூவுலகில் வந்துதித்த பூ அவள்!
கைக் கெட்டும் தூரத்தில்
கமழும் அவள் வாசம்!
அந்த வாசத்தை நுகர்ந்தாலே
வயிறு பசியாறி விடும்!
விரைந்து போ நிலவே நிலவே
வினாடியும் தாமதிக்காதே!
அவளுக்காய் ஆத்மா ஒன்று
அல்லாடித் திண்டாடுவதை
வாஞ்சையாய் எடுத்துச் சொல்லு
வரச்சொல்லு ஆற்றுப் பக்கம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.