எதிர்காலம்:  அழகூர். அருண்.  ஞானசேகரன்.

Updated on
1 min read

எதிர்காலக்   கனவொன்று   வாழ்வினில்   நமக்கு
             இல்லாதப்   போதிலெந்த   ஏற்றமும்   இல்லை  !
மதிதன்னைக்   கொண்டதொரு   மாந்தரென்   றாக
             மறக்காமல்   இலக்குதனை   நோக்கிபய   ணிப்பார் !
விதிவசத்   தாலெதுவும்   நடக்காதப்   போதும்
             விரக்திதனைக்   கொள்ளாமல்   விவேகமுடன்   வேறு
புதியதொரு   பாதைதனில்   பயணிக்கத்   துணிவார் ;
             போற்றலுறத்   தக்கபடி   இலக்கினை   அடைவார்  !

எதிர்காலம்   இல்லையென   இடிந்தவர்  தம்மை
             எவர்வந்து   காக்கவும்   இயலாதாம்   உண்மை !
விதிதன்னைப்  பழித்திட்டு   ஓய்ந்தவர்   வாழ்வில்
             வெற்றியிலை,   மாறாகக்   காண்பதும்   தாழ்வே !
அதிமதுரத்   தேனதனை  சுவைத்திடல்   வேண்டின்
             அதற்காக   மரமதனில்   ஏறத்தான்   வேண்டும்!
சதிகள்தனைக்   கண்டஞ்சல்   கோழைகளின்   வாழ்வில்,
             சாமர்த்யம்   தனையிழக்க   எதிர்காலம்   இலலை !

எழுச்சிதனைக்   கொண்டவர்க்கு   நல்லயெதிர்   காலம்
           இல்லார்க்கு   என்றென்றும்   இலையுதிர்   காலம் !
விழுந்தாலும்   எழுந்தோடும்   எண்ணம்வர   வேண்டும்,
           விவேகமதை   என்னாளும்   துணைகொள்ள  வேண்டும்!
பழுதுற்ற   வாழ்வென்றே   ஆகிடுதல்   எல்லாம்
           பாதியில்   நம்பிக்கை   இழந்தவரின்   வாழ்வே !
தொழுவதே   நல்லயெதிர்   காலந்   தராதாம்
           தொடர்ந்தநல்   உழைப்பின்றி   வெற்றிகிட்   டாதாம் !

நாட்டின்எதிர்   காலமதும்   நம்மக்கள்   கையில்
           நலமான   எதிர்காலம்   தனைக்கண்டு   உய்ய !
கோட்டைக்குள்   புகுந்திடத்   துடிப்பவர்கள்   தம்மின்
           குலப்பெருமை   தம்மைநாம்   ஆய்ந்திடல்   வேண்டும் !
வேட்டைக்கா   டென்றெண்ணி    ஆட்டமிடு   வோரை
           வேருடன்   களைவதெலாம்   நம்கடமை   தானே !
ஆட்டமிட்டு   கோடிகண்டப்   பலரைநாம்   கண்டோம்
           அவர்களைக்   களைந்திடும்   மனவுறுதி   கொள்வோம் !
 

பயிர்களதன்   எதிர்காலம்   மழையதனின்   கையில் ,
            பாங்குடனே   பெய்யத்தான்  பயிரெலாம்   விளையும் !
வெயிலுக்கும்   இணையானப்   பங்கதில்   உண்டாம் ,
            விவசாயம்   தழைப்பதெலாம்   வெய்யிலால்   தானாம் !
மெய்யிதனை   உணராமல்   சிலரின்றும்   சொல்வார்
            மேலான   எதிர்காலம்   உன்கையில்   என்றே !
பொய்யென்றே  இன்னதைநான்   விலக்கிவிட   மாட்டேன்,
             பொதுவாக   எதிர்காலம்   விதியதனின்   கையில் !

மலர்ச்சியைக்   கொண்டநல்   எதிர்காலம் --- தன்னை
             மனதினில்   கொள்ளார்   எவர்தானோ ?
சிலரின்று   மலர்ச்சியை   வேண்டிநின்றும் --- உழைக்க
             சிறிதுமே   துணிந்திடா   திருக்கின்றார் !
பலரின்றும்   மலர்ச்சியை    வேண்டிநின்று --- இரவு
             பகலென   உழைத்தெதிர்   காலமதை ,
நலமுறப்   பெற்றதைக்   காண்கின்றோம் --- அந்த
             நயமும்   போற்றிடத்   தக்கதன்றோ ?

எதிர்காலக்   கனவதுவே   ஏற்றந்தரும்   படிகள்எனப்
பதியட்டும்   மனதினிலே   பாந்தமுடன் ! --- சதிகண்டும்
உளந்தன்னில்   சோர்வுதன்னை   ஒருசிறிதும்   கொள்ளாமல்
விளக்கமதைக்   காண்கநீ   விரைந்து !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com