எதிர்காலம்: பாவலர் கோ. மலர்வண்ணன்

Updated on
1 min read

'எதிர்காலம் ஒளிமயமாய் இருத்தல் வேண்டும்'
    எனும்ஆவல் எல்லோர்க்கும் உண்டாம்! ஆனால்,
புதிர்கால மாய்அஃது புலர்ந்து, நாளை
    பொல்லாங்கை விளைவித்தல் கூடும் என்றால்
அதிர்வலைகள் நமைவந்து தாக்கி டாதா?
    அறிவியலார் எச்சரிக்கை பொய்யாய்ப் போமோ!
விதிர்விதிர்க்கப் போகின்றோம்! உலகம் நாளை
    விளைக்காத துயரெல்லாம் விளைத்தல் கூடும்!

சுற்றுப்புறச் சூழலது மாசு பட்டுச்
    சூழ்ந்துள்ள ஓசோனின் படலம் கெட்டுக்
கற்றையொளிக் கதிரவனின் ஒளிக்க திர்கள்
    கடுகிவந்து நேரடியாய்ப் படுவ தாலே
'புற்றுநோயும் தோல்நோயும் காணும்' என்று
    புகலுவதைப் பொய்யென்று மறுப்பார் உண்டோ?
சற்றுமெண்ணிப் பாராமல் எதிர்கா லத்தை
    சரியாக்க முனையாமல் வாழு கின்றோம்!

உலகவெப்பம் நாளுக்குநாள் உயர்வ தாலே
    ஓங்குபனி மலைகளெல்லாம் உருகி, வந்தே
அலைகடலின் நீர்மட்டம் அதிக ரிக்க
    அடுத்துள்ள நிலப்பரப்பை விழுங்கும் என்னும்
குலைநடுங்கும் செய்தியினைச் சொல்கின் றார்கள்!
    கூற்றிதனை மறுப்பதற்கு வருவார் இல்லை!
அளவில்லா நெருக்கடிகள் எதிர்கா லத்தை
    அண்டிவரக் காத்திருக்க, என்ன செய்வோம்?

இயற்கையினை அழித்திடாமல் பாது காத்தல்,
    எங்கெங்கும் மரம்நட்டு வளர்த்தெ டுத்தல்,
செயற்கையினை வரம்புக்குள் பயன்ப டுத்தல்,
    சீற்றங்கள் நிகழுங்கால் அழிவில் லாமல்
வியக்கத்தான் எதிர்கொள்ளல், திட்ட மிட்டு
    வினையாற்றல் இவையெல்லாம் இல்லா விட்டால்
முயற்கொம்பே இவ்வுலகைப் பாது காத்தல்!
     முழுமூச்சாய்ச் செயல்படுவோம்; ஆகா தாமோ?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com