எதிர்காலம் கேள்விக்குறி ஆகிடுமோ திறன்மிகு
இளைஞர் நாட்டையாளும் வலிமை பெற்றால்?
சதிராடும் போர்க்களம் போல் மக்கள் கூட்டம்
சல்லிக் காசுக்காக வங்கிமுன் திரண்டிடுமோ?
உழவர்குடி பெருமக்கள் நாள்தோறும் வயலை
உற்றுப் பார்த்து மறுநொடியில் மாண்டிடுமா?
இழவு வீடாய் மாற்றிடத்தான் இந்த நாட்டை
இளைஞர்குழு எந்நாளும் விட்டிடுமா?
நம்பிக்கை நட்சத்திரம் இளைஞரல்லோ இந்த
நாட்டின் காவல் தெய்வம் வேறெவரோ?
நம்பி மோசம் விழைக்கின்ற பகைப்டையை
நாசம்செய்யும் வீரக்குலம் அவர்க ளன்றோ?
அந்திவானின் ஒளிக்கீற்றே அற்புதத்தை நிகழ்த்தவா?
அறிவியல் விண்ணியல் பொருளியலும் பயின்றநீ
அரசியலை மாற்றிவைக்க இன்றேவா, ஊழல்
ஆட்சியை வேரறுக்க வீறு கொண்ட வீரா வா.
எதிர்காலம் உன்னதன்று எழுந்துவா இதுபோல்
எந்நாளும் நடந்ததில்லை; அறிந்துவா ; உன்னால்
வருங்காலம் வல்லரசாம் நம்பிவா; கீழ்வானில்
இருளகற்றும் ஒளி விளக்கே விரைந்து வா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.