மல்லுக் கட்டும் சல்லிக் கட்டு: பாவலர் கோ. மலர்வண்ணன்

Published on

தமிழர்தம் வீரவிளை யாட்டில் ஒன்று
    தைத்திங்கள் பொங்கல்நன் நாளை ஒட்டி
தமிழகத்தில் அரங்கேறும் சல்லிக் கட்டாம்!
    தனிப்பெருமை வாய்ந்ததிந்தச் சல்லிக் கட்டை
அமைதியுடன் நிறைவேற்றும் அலங்கா நல்லூர்;
    அதைப்போன்றே மற்றெல்லா இடத்தும் காணும்!
குமைந்திடவே அதையின்று தடைசெய் கின்றார்;
    குற்றேவல் விழைவார்க்குத் துணைநிற் கின்றார்!

'ஏறுதழு வல்'என்னும் சல்லிக் கட்டின்
    இயல்புணரார், அதையாய்ந்து பாரார் தாமே
மாறுகொளத் தமிழர்தம் பண்பாட் டிற்கு
    மாசுரைக்கும் பாங்கினிலே தடைகொ ணர்ந்தார்!
ஊறுசெயும் எண்ணமிலாத் தமிழன் தானா
    உயிரெனவே வளர்த்துவரும் காளை கட்கு
மாறுசெய்யத் துணிந்திடுவான்!? காளை யோடு
    மகிழ்ந்துவிளை யாடல்தான் சல்லிக் கட்டே!

தமிழர்தம் நாகரிகம், உயர்பண் பாட்டில்
    தகைமையில்லா தவைகளுக்கோ இடமே இல்லை!
அமிழ்தமெனும் தமிழைத்தாய் மொழியாய்க் கொண்ட
    அருந்தமிழர் உலகிற்கே காட்டாய் வாழ்வார்!
இமியளவும் பழிப்பில்லா வாழ்க்கை வாழும்
    இனியவரா கேடுசெய்யும் செயல்வ குப்பார்?!
குமிழ்போலும் கொள்கையினை உடையோர் தாமே
    குறைகூறி முன்னோர்க்குப் பழிசேர்க் கின்றார்!

காதலையும் வீரத்தையும் இருகண் ணாகக்
    காத்துவந்தார் நற்றமிழர்! சல்லிக் கட்டைக்
காதலிதன் காதலனின் ஆண்மை, ஊரார்
    கண்டுமெச்சத் தகுங்கருவி யாய்தான் கண்டாள்!
ஆதலினால், இளம்பெண்கள் காளை போலும்
    ஆண்மகனைத் தெரிந்தெடுக்க வளர்த்தார் காளை!
நோதலைச்செய் யாதிந்தச் சல்லிக் கட்டு!
    நுண்ணறிவு கொண்டவர்க்கே புரியும் நன்றே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com