சட்டம்: பாவலர் கோ. மலர்வண்ணன்

Updated on
1 min read

குடிமக்கள் உரிமைகளைப் பெறுவ தற்கும்
    குற்றங்கள் நிகழாமல் தடுப்ப தற்கும்
அடிமட்டத் தொழிலாளர் நலன்கள் காத்தே
    அவர்குடும்பம் செழித்தோங்கி வளர்வ தற்கும்
படிப்பவர்க்குக் கல்வியெலாங் கிடைப்ப தற்கும்
    படித்தபின்பு வேலைவாய்ப்பை அடைவ தற்கும்
அடிப்படையாய்ச் சட்டங்கள் இயற்ற வேண்டும்;
    அவையெல்லாம் நடைமுறைக்குக் கொணர்தல் வேண்டும்!

சட்டங்கள் இயற்றாமல் அரசாங் கத்தால்
    சாதிக்க முடியாதே! நன்றென் றாலும்
திட்டங்கள் முன்னதாகத் தீட்டிக் கொண்டு
    தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்! பின்னர்
சட்டத்தின் முன்வரைவைச் சட்ட மன்றில்
    தாக்கல்செய வேண்டும்;பின் ஆளு நர்க்குச்
சட்டமாக்க ஒப்புதலுக் கனுப்ப வேண்டும்!
    சட்டமான பின்பேதான் செல்லும் எல்லாம்!

செயலொன்றைச் செய்வதற்குச் சட்டந் தன்னில்
    இடமல்லை என்பதற்காய் விடலா கும்மோ?
செயல்படுத்தும் அவசரத்தைக் கருத்தில் கொண்டு     
    செயவேண்டும் அவசரசட் டத்தை நன்றே!
அயல்நாட்டின், பகைநாட்டின் தூண்ட லாலே
    அதிகரிக்கும் வன்முறைகள் தடுப்ப தற்கும்
இயற்றிவைத்தார் 'தடா,பொடா'நாம் மறந்தோம் இல்லை!
    இங்குந்தான் 'டெஸ்மா,எஸ்மா' கண்டுள் ளோமே!

எல்லோரும் சட்டத்தை மதிக்க வேண்டும்!
    இதனாலே நல்லாட்சி மலரும் நாட்டில்!
பொல்லாராய்ச் சிற்சிலரே மதித்தி டாமல்
    பொல்லாங்கு செய்திடுவார்; அவரை யெல்லாம்
இல்லாராய்ச் செய்துவிட்டால் இனிக்கும் நாடே!
    'இருட்டறையில் உள்ளதடா சட்டம்' என்றே
அல்லதற்குச் சட்டத்தை வளைத்தல் தீதே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com