விடுதலை: பாவலர் கருமலைத்தமிழாழன்

Updated on
1 min read

ஆலைகளின்  கழிவுகளை  ஆற்றில்  சேர்க்கும்
            அநியாயப்   போக்கிற்குத்   தடைவி   தித்து
சோலைகளைத்   தோப்புகளைப்   பாது  காத்து
            சொரிகாற்றின்   மாசகற்றித்   தூய்மை   யாக்கி
சாலைகளின்   இருபுறமும்   மரங்கள்  நட்டுச்
            சரியாக   வளரவைத்துச்   சூழல்   பேணிக்
காலையிலே   எழுந்தவுடன்   கைகள்   வீசிக்
            கால்நடந்து   விடுதலையைத்   தருவோம்   நோய்க்கே !

அதிகார   ஆட்சிகளின்   ஏவ   லுக்கும்
            அரசியலார்   ஆர்ப்பாட்ட   வன்மு   றைக்கும்
பதிலேதும்   சொல்லாமல்   அமைதி   யாகப்
            பரிதாப  அடிமையராய்   வாழ்தல்   விட்டுப்
புதிதான   ஊழலற்ற   சமுதா   யத்தைப்
            புரட்சியிலே   நிறுவுதற்குத்   துணிவை   ஏற்று
விதிதன்னை   மாற்றியெல்லாம்   பொதுமை   யாக்க
            விடுதலையைத்   தந்திடுவோம்   அச்சத்   திற்கே !
 

குடிதனக்கு   விடுதலையை   அளித்தே   இன்பம்
            குடியேற்றி   வீடுதன்னை   ஒளிர   வைப்போம்
மடிதனக்கு   விடுதலையை   அளித்தே   கையின்
            மாவுழைப்பால்   நாடுதன்னை   உயர   வைப்போம் !
நடிப்பிற்கு   விடுதலையை   அளித்தே   உண்மை
            நட்பன்பால்  அனைவரையும்   அணைத்தே   நிற்போம்
துடிக்காத   தன்னலத்தைத்   துரத்தி   விட்டுத்
            துயர்போக்கும்   மனிதநேயம்   நெஞ்சில்  வைப்போம் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com