நிழல்  தேடி: பாவலர் கருமலைத்தமிழாழன்

Updated on
1 min read

நம்முடனே  இருக்கின்ற   நிழலைத்   தேடி
            நாமிங்கே   முட்டாளாய்   அலைதல்  போல
நம்முடனே   இருக்கின்ற   கைக  ளாலே
            நம்கண்ணீர்  துடைப்பதற்கு   முயன்றி  டாமல்
நம்முடைய  விழிநீரைத்   துடைப்ப  தற்கு
            நாம்அயலார்   கைகளினைத்   தேடு  கின்றோம்
நம்முள்ளே   இருக்கின்ற  வலிமை   தன்னை
            நாமுணர்ந்து   முயன்றாலே  துயரம்  மாயும் !

பிறர்கால்கள்   நம்முடலைத்   தாங்கி   டாது
            பிறருழைப்பு  நம்பசியைப்   போக்கி   டாது
திறமைகளோ   நமைத்தேடி  வந்தி   டாது
            திகழ்செல்வம்   தானாகக்   குவிந்தி  டாது
அறமல்லா   வழியெல்லாம்   இருளுக்   குள்ளே
            அகப்படுமா  எனநிழலைத்   தேடல்போன்றாம்
சிறப்பெல்லாம்   தளராமல்  உழைக்கும்   போதே
            சீராக   இக்குமுகம்   நமக்க   ளிக்கும் !

காடுகளை   மலைகளினைத்   தகர்த்து   விட்டும்
            கவின்தந்த   இயற்கையினை   அழித்து  விட்டும்
ஓடுகின்றோம்   கானலினை  நீராம்  என்றே
            ஒற்றிநாவின்   தாகத்தைத்   தீர்ப்ப   தற்கே
வீடுதனில்   சங்கத்து   இலக்கி  யங்கள்
            வீற்றிருக்க   அதனருமை   அறிந்தி   டாமல்
தேடுகின்றோம் நிழலைஉச்சி  வெயிலில்  மேலே
            தேவையின்று   நம்பிக்கை  நம்மின்  மீதே !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com