ஆறோடும்  நீரோடும்; பாவலர் கருமலைத்தமிழாழன்

Updated on
1 min read

பண்பாடு  நாகரிகம்   பிறப்ப  தற்குப்
    பண்டையநாள்   பாய்ந்திட்ட   ஆறெல்   லாமே
தண்நிலவும்   கதிர்பொழியும்   ஒளியைப்   போலத்
    தரையிலின்றும்   வளம்தன்னைக்  கூட்டும்   போது
மண்மீதில்   முதல்பிறந்த   தமிழ   தத்தை
    மணக்கவைத்த   காவிரியை   வற்ற   வைத்தார்
கண்முன்னே   பாய்ந்தபோதும்    கன்ன  டத்தார்
    கால்வெட்டி    அணைகளுக்குள்   முடக்கி   வைத்தார் !

முப்போகம்   விளைந்திட்ட   தஞ்சை   மண்ணோ
    முளைவிடவும்   முடியாமல்   தவிக்கு   தின்று
எப்போதும்   நீர்பாய்ந்த   வயல்க   ளெல்லாம்
    எடுத்துரைக்கப்   பாலைவன   மான   தின்று
செப்புமாறு   உயர்ந்திருந்த   விவசா   யெல்லாம்
    செத்துசெத்து   விழுகின்றார்   வறுமை   யாலே
அப்பழுக்கே   இல்லாமல்   பாய்ந்த   பொன்னி
    ஆறோடும்   நீரோடும்   கனவா   யிற்று !

பழுதென்றே   தமிழகத்தைத்   தில்லி   யாட்சி
    பாராமல்  ஒதுக்குகின்ற   புறக்க   ணிப்பால்
பொழுதெல்லாம்   நீதிமன்றக்   கதவைத்   தட்டும்
    போராட்டம்   ஓயவில்லை   நீரும்   இல்லை
முழுதாகத்    தமிழகந்தான்   பாலை   யாகி
    முதுகுடிகள்    பட்டினியில்   சாவ   தற்குள்
உழுவதற்கும்   குடிப்பதற்கும்   உரிய   பங்கை
    உரிமையுடன்   பெறுவதற்கே   எழுவோம்   ஒன்றாய் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com