தொடர்ச்சியாய் ஆறு ரன்கள்..
விசில், கரகோஷங்களோடு
அமர்க்களமாக நடந்து கொண்டு இருந்தது
கிராமத்து ஐபிஎல்
நீர் வற்றிய குளத்தை
ஆடுகளமாக மாற்றி..
ஊருக்கே குடையாய் இருக்கும்
ஆலமரம்
அருகே சின்னஞ்சிறு பிள்ளையார்கோயில்
கிராமத்து அடையாளங்களின் துணையோடு
சந்தோஷமாக இருந்த குளம் அது..
அகலமான படித்துறைகள்
பெண்கள் தேய்த்துக் குளித்து பின்
விட்டுச்சென்ற மஞ்சளை
தொட்டுவிட நினைக்கும்
சின்ன சின்ன அலைகள்
துள்ளி விளையாடி
இரவில் நிலாவோடு
செல்பி எடுத்துக்கொள்ளும் மீன்கள்
வந்து வந்து பேசிவிட்டு பறக்கும்
கொக்குகள்..
கரையோர எல்லைக்காவலர்களாய்
காய்த்து குலுங்கும் ஈச்சமரங்கள்
மகிழ்ச்சியாய் இருந்தது
அதன் வாழ்க்கை..
பொறாமைப்பட்ட சூரியன்
மேகங்களை கைது செய்து
எங்கோ அனுப்பி வைக்க
நின்று போனது விண் துளி..
வறட்சி நாட்டியாஞ்சலி ஆரம்பமாக
எல்லாமே ஆடிப்போனது
தாகம் அடங்காத பூமி
வேகமாய் உறிஞ்ச
அதன் வாயை அடைக்க தெர்மாகோல்
தேடிப் பறந்தது கிளிகள்..
வெப்பம் தாங்காத பிள்ளையார்
வேறு இடம் தேட நினைக்க
வலுக்கட்டாயமாய் அவரை
வெளிநாடு சுற்றி பார்க்க
தூக்கிச் சென்றார்கள் சிலர்
தூர்வார நினைக்காத நிர்வாகம்
நெடுஞ்சாலை மதுக்கடையை
அங்கே திறக்க முடிவெடுக்க
காப்பாற்ற வாருங்கள் வாருங்களென்று
கதறுகிறது
நீர் வற்றிய அந்த குளம்..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.