அன்னையின் முகத்தைக் காண மறுத்து அமைதியில் நீயும் உறைந்தாயோ?என்னைத் தவிக்க வைத்துவிட்டு எங்கே சென்று மறைந்தாயோ?பொன்னை பொருளை போற்றுமுலகு உன்னை வெறுக்கும் என்றாயோ?தன்னை உணரா மனிதரை வெறுத்து விண்ணை நோக்கிச் சென்றாயோ?கொடிய உலகின் தன்மையை நினைத்து பிறக்க நீயும் மறுத்தாயோ?நெடிய வாழ்க்கைப் பயணத்தை எண்ணி அச்சம் தன்னைக் கொண்டாயோ?விடியலை நோக்கா அடிமை விலங்குகள் என்றே மாந்தரை நினைத்தாயோ?பிடிமண்ணும் கூட சொந்தமில்லை என்பதை நினைத்துப் பறந்தாயோ?சொந்தங்கள் இல்லா தன்னல வாழ்வை தவிர்ப்பதற்கு நினைத்தாயோ?முந்திச் செல்லும் பந்தய குதிரை போன்றொரு வாழ்வை வெறுத்தாயோ?தந்திர நரி போல் வாழ்பவன் சிறந்தவன் என்றிடும் தரணியை துறந்தாயோ?அந்தியில் மலரும் தாமரை முகத்தை காண்பது இனிமேல் எப்போதோ?மலரும் முன்பே உதிர்ந்து விட்டாயே மகனே(ளே) எந்தன் மணிவிளக்கே..புலரும் முன்பே இருண்டு விட்டாயே கண்ணே எந்தன் கண்மணியே…பலரும் போற்ற நீ வாழவேண்டி மகனே(ளே) என்னுள் கனவை வளர்த்தேனே..மலரடி இரண்டும் மண்ணில் படுமுன் விண்ணுள் துளியாய் மறைந்தாயே..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.