கருவில் தொலைந்த குழந்தை: பெருமழை விஜய்

Updated on
1 min read

கருவில் தொலைந்த குழந்தையாய்
இந்தியச் சுதந்திரம் இங்கு 
காற்றில் பறக்கிறது!

அடியாட்களும் அதர்மவாதிகளும்
அரசியலில் நுழைந்ததால்
அது சாக்கடையாய் நாறுகிறது!

காசுக்காக ஓட்டு போடும்
கயமைத் தனம் நாட்டில்
கச்சிதமாய் வேரூன்றி விட்டது!

தலைவர்கள் அத்தனை பேரும்
தங்கள் கட்சி ஆட்சியமைக்க
தப்பான வழியில் நடக்கிறார்கள்!

எதனைப் பற்றியும் கவலையின்றி
எப்பொழுதோ கிடைக்கும் இலவசத்திற்காய்
மக்களனைவரும் நீண்ட வரிசையில்!

திருமதிகள் கூட நம்மூரில்
செல்வி  என்று கூறியே
ஆட்சி செய்து அகன்றார்கள்!

உலகில் உள்ள மக்களில்
ஒன்றுக்கும் உதவாத மக்களாய்
இன்றைய தமிழ் மக்கள்!

அரசு அலுவலகங்கள் பலவற்றிலும்
அன்றாடம் புரளுது பலலட்சம்
அன்பளிப்பு என்ற பெயரால்!

உரிமைக்குப் போராடும் அரசூழியர்கள்
உரிய வேலையைச் செய்யாமல்
ஊரை ஏமாற்றவே செய்கின்றனர்!

கக்கூஸ் தண்ணியில் டீ போட்டு
கவனிக்கிறது நம் ரயில்வே
கனிவோடு அதன் பிரயாணிகளை!

மருத்துவர்கள் நம் நாட்டில்
மங்கையரைப் படம் பிடித்து
மாற்றுத் தொழில் செய்கின்றனர்!

சிறுமியாயப் பிறந்த காரணத்தால்
சின்னா பின்னப் பட்டு 
கொலைக்கு ஆளாகிறார்கள் கொழுந்துகள்!

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை
ஆள்பவர்களே அலட்சியம் செய்தால்
அந்தநாடு உருப்படுவ தெப்படி?

கருவில் தொலைந்த குழந்தையாய்
இந்தியச் சுதந்திரம் இங்கு 
காற்றில் பறக்கிறது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com