இரண்டாம் பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 1, 2

சுடர்விளக்காக, அமுதமாகப் பரவியுள்ளான்
Updated on
1 min read

வைகுந்தா, மணிவண்ணனே, என் பொல்லாத் திருக்குறளா,
                             என்னுள மன்னி
வைகும் வைகல்தோறும் அமுதுஆய வான் ஏறே,
செய்குந்தா வரும்தீமை உன் அடியார்க்குத் தீர்த்து
                             அசுரர்க்குத் தீமைகள்
செய் குந்தா, உன்னை நான் பிடித்தேன்கொள் சிக்கெனவே.

பரமபதத்தில் திகழ்கிறவனே, மணிவண்ணனே, என்னுடைய அழகிய வாமனனே, எனக்குள் தங்கியிருந்து நாள்தோறும் அமுதமாகத் திகழ்கிற உயர்ந்த சிங்கமே, ஒருவர் ஏதேனும் தவறுசெய்தால், கண்டிப்பாக அவர்களுக்குத் தீமை வரும் என்பார்கள், ஆனால், அத்தகைய தீமைகள் உன் அடியவர்களை நெருங்காமல் தீர்க்கிறவனே, அசுரர்களுக்குத் தீமைகள் செய்கிற குந்தனே, உன்னை நான் சிக்கெனப் பிடித்தேன், இதை நீ மனத்தில் கொள்வாய்.

•••

பாடல் - 2

சிக்கெனச் சிறிது ஓர்இடமும் புறப்படாத் தன்னுள்ளே
                                  உலகுகள்
ஒக்கவே விழுங்கிப் புகுந்தான், புகுந்து அதன்பின்
மிக்க ஞானவெள்ளச் சுடர்விளக்காய்த் துளக்குஅற்று
                    அமுதமாய் எங்கும்
பக்கம்நோக்கு அறியான் என் பைந்தாமரைக் கண்ணனே.

பைந்தாமரை போன்ற கண்களைக் கொண்ட எம்பெருமான், சிறிது இடமும் வெளியே செல்லாதபடி உலகங்கள் அனைத்தையும் விழுங்கித் தனக்குள்ளே வைத்தான்.

அத்தகைய பெருமான், எனக்குள் புகுந்தான், அங்கே மிகுந்த ஞானவெள்ளமாக, சுடர்விளக்காக, அமுதமாகப் பரவியுள்ளான், என்னைவிட்டுச் செல்லாமல், எந்தப்பக்கமும் திரும்பாமல் எனக்குள்ளேயே இருந்து அருள் செய்கிறான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com