இரண்டாம் பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 7, 8

உன் அருளாகிய கடலில் மூழ்கினேன்
Updated on
1 min read

முடியாதது என் எனக்கேல் இனி? முழு ஏழ்உலகும்
                         உண்டான் உகந்து வந்து
அடியேன் உட்புகுந்தான், அகல்வானும் அல்லன், இனிச்
செடிஆர் நோய்கள் எல்லாம் துரந்து எமர் கீழ்,மேல்
                                   எழுபிறப்பும்
விடியா வெந்நரகத்து என்றும் சேர்தல் மாறினரே.

ஏழு உலகங்களையும் முழுமையாக உண்ட பெருமான், விரும்பி வந்து எனக்குள் புகுந்தான், அங்கிருந்து நீங்க மறுக்கிறான், இதனால், என்னைச் சார்ந்த ஏழு பிறவியினர், இதற்குமுன் பிறந்த ஏழு பிறவியினர், இதற்குப்பின் வரப்போகும் ஏழு பிறவியினர் என 21 தலைமுறைகளைச் சேர்ந்தவர்களும் பாவங்களால் வரும் நோய்களில் அகப்படமாட்டார்கள், வளர்ந்துகொண்டே இருக்கிற துன்பத்தைக்கொண்ட வெம்மையான நரகத்தில் சேரமாட்டார்கள்.

இந்தப் பாக்கியம் பெற்ற என்னால் முடியாததுதான் என்ன? (ஏதுமில்லை.)

•••

பாடல் - 8

மாறிமாறிப் பலபிறப்பும் பிறந்து, அடியை அடைந்து,
                                உள்ளம் தேறி,
ஈறுஇல் இன்பத்து இருவெள்ளம் யான் மூழ்கினன்,
பாறிப்பாறி அசுரர்தம் பல்குழாங்கள் நீறுஎழப் பாய்பறவைஒன்று
ஏறி வீற்றிருந்தாய், உன்னை என்னுள் நீக்கேல் எந்தாய்.

அசுரர் கூட்டங்கள் சாம்பலாகி அழியும்படி பாய்கின்ற கருடன் மீது வீற்றிருக்கும் பெருமானே, நான் மாறிமாறிப் பல பிறவிகள் எடுத்தேன், உன்னுடைய திருவடியை அடைந்து உள்ளம் தேறினேன், முடிவில்லாத இன்பத்தைத் தரும் உன் அருளாகிய கடலில் மூழ்கினேன், பெருமானே, நீ என்னைவிட்டு ஒருபோதும் நீங்காதே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com