மூன்றாம் பத்து முதல் திருமொழி - பாடல் 1, 2

திருமுகத்தின் ஒளிதான் திருமுடியின்
Updated on
1 min read

முடிச்சோதியாய் உனது முகச்சோதி மலர்ந்ததுவோ,
அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ,
படிச்சோதி ஆடையொடும் பல்கலனாய் நின் பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ, திருமாலே, கட்டுரையே.

திருமாலே,

உனது திருமுகத்தின் ஒளிதான் திருமுடியின் ஒளியாகி மலர்ந்ததோ, உனது திருவடிகளின் ஒளிதான் நீ நிற்கும் தாமரையாக மலர்ந்ததோ, உன்னுடைய பசும்பொன் போன்ற இடுப்பின் ஒளிதான் இயற்கையான பிரகாசத்தைக்கொண்ட உனது ஆடையாக, பல ஆபரணங்களாகக் கலந்ததோ, அதனை எனக்குச் சொல்வாய்.

•••

பாடல் - 2

கட்டுரைக்கில் தாமரை நின் கண், பாதம், கை ஒவ்வா,
சுட்டு உரைத்த நல்பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது,
ஒட்டு உரைத்து இவ் உலகு உன்னைப் புகழ்வு எல்லாம்
                                                        பெரும்பாலும்
பட்டுரையாய்ப் புற்குஎன்றே காட்டுமால் பரஞ்சோதீ!

உயர்ந்த ஒளிவடிவமான பெருமானே, உன்னுடைய திருக்கண்கள், திருவடிகள், திருக்கரங்களுக்குத் தாமரை ஒப்பாகாது, நெருப்பில் சுட்டு உரைகல்லால் உரைத்த நல்ல பொன்கூட, உன்னுடைய திருமேனியின் ஒளிக்கு ஒப்பாகாது, ஆகவே, இந்த உலகத்தோர் உன்னைப் பல விஷயங்களோடு ஒப்பிட்டுப் புகழ்வதெல்லாம் பெரும்பாலும் வெற்றுப்பேச்சுகள்தான், அற்பமானவைதான். (உனக்கு எதுவும், யாரும் இணையில்லை.)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com