

பாடல் - 3
ஈவுஇலாத தீவினைகள் எத்தனை செய்தனன்கொல்,
தாவி வையம் கொண்ட எந்தாய், தாமோதரா, என்று என்று
கூவிக்கூவி நெஞ்சு உருகி, கண் பனிசோர நின்றால்
பாவி நீ என்று ஒன்று சொல்லாய், பாவியேன் காண வந்தே.
அழியாத தீவினைகள் எத்தனையை நான் செய்திருக்கிறேனோ, தெரியவில்லை! தாவி உலகை அளந்த எங்கள் தந்தையே, தாமோதரா என்று உன்னை அழைத்துக் கூவுகிறேன், நெஞ்சு உருகுகிறேன், கண்களில் நீர் சோர நிற்கிறேன், என்முன்னே வரக்கூடாதா, 'நீ ஒரு பாவி' என்றாவது சொல்லக்கூடாதா!
******
பாடல் - 4
காண வந்து, என் கண்முகப்பே தாமரைக் கண் பிறழ,
ஆணி செம்பொன் மேனி எந்தாய், நின்று அருளாய் என்று என்று
நாணம் இல்லாச் சிறுதகையேன் நான் இங்கு அலற்றுவது என்
பேணி வானோர் காணமாட்டாப் பீடு உடை அப்பனையே?
தேவர்கள் முயன்று வணங்கினாலும் அவர்களால் காண இயலாத சிறப்புடைய தந்தையை அழைக்கிறேன், 'தரமான, சிறந்த பொன் போன்ற திருமேனியைக்கொண்ட எங்கள் தந்தையே, நான் காணும்படி இங்கே வா, உன்னுடைய தாமரை போன்ற கண்கள் என் கண்முன்னே திகழும்படி வந்து நின்று எங்களுக்கு அருள் செய்' என்று அலற்றுகிறேன், நாணமில்லாத, எந்தச் சிறப்பும் இல்லாத அற்பனான நான் இப்படி அலற்றி என்ன பயன்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.