நான்காம் பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 9, 10

தண்ணீர் தரவில்லை
நான்காம் பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 9, 10
Updated on
1 min read

பாடல் - 9

இடகில்லேன் ஒன்று, அட்டகில்லேன், ஐம்புலன்
                                                                                   வெல்லகில்லேன்,
கடவன் ஆகிக் காலம்தோறும் பூப்பறித்து ஏத்தகில்லேன்,
மட வல் நெஞ்சம் காதல் கூர, வல்வினையேன் அயர்ப்பாய்த்
தடவுகின்றேன், எங்கு காண்பன் சக்கரத்து அண்ணலையே?

பசித்தவர்களுக்கு நான் ஒரு பிடி சோறு தரவில்லை, தாகம் என்று வந்தவர்களுக்குத் தண்ணீர் தரவில்லை, ஐம்புலன்களை வெல்லவில்லை, கடமையுணர்வோடு காலந்தோறும் பூப்பறித்துத் தூவி எம்பெருமானைப் போற்றவில்லை, வல்வினைகளைச் செய்தவனான என்னுடைய மடமை நிறைந்த, வலிமையான நெஞ்சத்தில் எம்பெருமான்மீது அன்பு பெருகுகிறது, அறிவில்லாமல் அவரை அங்கும் இங்கும் தேடுகிறேன், ‘சக்ராயுதம் ஏந்திய அண்ணலை எங்கே காண்பேன்?’ என்று தடவுகின்றேன்.

******

பாடல் - 10

சக்கரத்து அண்ணலே என்று தாழ்ந்து, கண்ணீர் ததும்ப,
பக்கம் நோக்கி நின்று அளந்தேன், பாவியேன்
                                                                               காண்கின்றிலேன்,
மிக்க ஞான மூர்த்திஆய வேத விளக்கினை என்
தக்க ஞானக்கண்களாலே கண்டு தழுவுவனே.

சக்ராயுதம் ஏந்திய அண்ணலே என்று ஏங்கினேன், கண்களில் நீர் ததும்ப, அந்தப்பக்கமும் இந்தப் பக்கமும் எம்பெருமானைத் தேடினேன், பாவியாகிய எனக்கு அவர் தென்படவில்லை, ஊனக்கண்களுக்கு அவர் தெரியாவிட்டால் என்ன? மிகுந்த ஞானமூர்த்தியான அந்த வேதவிளக்கை, எம்பெருமானை நான் என்னுடைய தகுதிமிக்க ஞானக்கண்களால் காண்பேன், தழுவுவேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com