ஐந்தாம் பத்து முதல் திருவாய்மொழி -  பாடல் 1, 2

பொய்யான பேச்சுகள்
ஐந்தாம் பத்து முதல் திருவாய்மொழி -  பாடல் 1, 2
Updated on
1 min read

பாடல் - 1

கைஆர் சக்கரத்து என் கருமாணிக்கமே என்று என்று
பொய்யே கைம்மை சொல்லிப் புறமே புறமே ஆடி
மெய்யே பெற்றுஒழிந்தேன், விதிவாய்க்கு இன்று
                                                                                         காப்பார் ஆர்?
ஐயோ, கண்ணபிரான், அறையோ இனிப் போனாலே.

'கையிலே சக்ராயுதத்தை ஏந்திய என் கருமாணிக்கமே' என்றெல்லாம் உன்னைப் போற்றினேன், ஆனால், அவை எல்லாம் வெறும் பொய்யான பேச்சுகள்தான், உண்மையில் நான் புற இன்பங்களில்தான் மகிழ்ந்திருந்தேன், ஆனாலும், நீ என்மீது அன்புகாட்டினாய், உண்மையான பக்தர்களுக்குச் செய்யும் அருளை எனக்கும் செய்தாய், ஒருவருக்கு ஒன்றைத் தர வேண்டும் என இறைவன் நினைத்துவிட்டால், அதை யாரால் தடுக்கமுடியும்? (யாராலும் தடுக்கமுடியாது.) எம்பெருமானே, கண்ணபிரானே, நீ என்னைவிட்டுப் போவதென்றால், தாராளமாகப் போகலாம், நான் தடுக்கமாட்டேன். (காரணம், நீ அப்படிச் செல்லமாட்டாய்.)

******

பாடல் - 2

போனாய் மாமருதின் நடுவே, என் பொல்லா மணியே,
தேனே, இன் அமுதே என்று என்றே சில கூத்துச் சொல்லத்
தானேல் எம்பெருமான், அவன் என் ஆகி ஒழிந்தான்
வானே, மாநிலமே மற்றும் முற்றும் என் உள்ளனவே.

'பெரிய மருதமரங்களின் நடுவே சென்றவனே, துளையிடப்படாத என் மாணிக்கமே, தேனே, இனிய அமுதே' என்றெல்லாம் சில பொய் வார்த்தைகளைச் சொன்னேன், ஆனால், அந்தச் சொற்களையும் அவன் ஏற்றுக்கொண்டான், எனக்குள் வந்து உறைகிறான், அதனால், இந்த வானம், பூமி, மற்ற அனைத்தும் எனக்குள்ளே நடக்கின்றன!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com