ஐந்தாம் பத்து முதல் திருவாய்மொழி - பாடல் 3, 4

பொய்யுரைகளை
ஐந்தாம் பத்து முதல் திருவாய்மொழி - பாடல் 3, 4
Updated on
2 min read

பாடல் - 3

உள்ளன மற்று உளவாப் புறமே சில மாயம் சொல்லி
வள்ளல் மணிவண்ணனே என்று என்றே உன்னையும்
                                                                             வஞ்சிக்கும்
கள்ள மனம் தவிர்ந்தே உன்னைக் கண்டுகொண்டு 
                                                                            உய்ந்தொழிந்தேன்,
வெள்ளத்தனைக் கிடந்தாய், இனி உன்னை விட்டு
                                                                            என்கொள்வனே?

எம்பெருமானே, எனக்குள்ளே உலக எண்ணங்கள் இருக்க, வெளியே சில பொய்யுரைகளைச் சொல்கிறேன், 'வள்ளலே, மணிவண்ணனே' என்று உன்னை அழைத்து, உன்னிடமும் பொய் சொல்லி வஞ்சிக்கிறேன், பின்னர், இந்தக் கள்ள மனத்தைத் தவிர்த்து, உண்மையாகவே உன்னைக் கண்டுகொண்டு உய்கிறேன், திருப்பாற்கடலிலே கிடந்த திருக்கோலத்தில் அருள்புரிபவனே, இனி உன்னை விட்டு நான் என்ன செய்வேன்? (ஏதும் செய்யமாட்டேன், உன்னை வணங்குவதே என் பணி.)

******

பாடல் - 4

என்கொள்வன் உன்னை விட்டு என்னும் வாசகங்கள்
                                                                            சொல்லியும்
வன்கள்வனேன் மனத்தை வலித்துக் கண்ண நீர் கரந்து
நின்கண் நெருங்கவைத்தே எனது ஆவியை நீக்ககில்லேன்
என்கண் மலினம் அறுத்து என்னைக் கூவி அருளாய்
                                                                           கண்ணனே.

எம்பெருமானே, 'உன்னைவிட்டு என்ன செய்வேன்?' என்று நான் (வெறுமனே) பேசுகிறேன், வலிய கள்வனான நான், மனத்தை உன்பக்கம் இழுக்கிறேன், கண்களில் நீர் சொரிய உன்னை நெருங்கி என் ஆவியைப் போக்கிக்கொள்ள முயல்கிறேன், ஆனால், இவை எனக்குச் சாத்தியமாகவில்லை. கண்ணனே, என்னுடைய பாவங்களை அறுத்து, என்னை நீயே உன்னிடம் அழைத்துக்கொள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com