
பாடல் - 3
ஞாலத்துஊடே நடந்தும் நின்றும் கிடந்து, இருந்தும்
சாலப் பலநாள் உகந்தோறு உயிர்கள் காப்பானே,
கோலத் திருமாமகளோடு உன்னைக் கூடாதே
சாலப் பலநாள் அடியேன் இன்னும் தளர்வேனோ?
யுகங்கள்தோறும் பூவுலகில் நடந்தும், நின்றும், கிடந்தும், இருந்தும் பலநாள்களாக உயிர்களைக் காப்பவனே, அழகிய திருமகளோடு விளங்கும் உன் திருவடிகளை நான் சேரும் நாள் என்று? இன்னும் பலநாள் நான் இங்கிருந்து தளரவேண்டுமோ?
***
பாடல் - 4
தளர்ந்தும் முறிந்தும் சகட அசுரர் உடல் வேறாப்
பிளந்து வீயத் திருக்கால் ஆண்ட பெருமானே,
கிளர்ந்து பிரமன், சிவன், இந்திரன், விண்ணவர் சூழ
விளங்க ஒருநாள் காண வாராய் விண்மீதே.
எம்பெருமானே, உன்னைக் கொல்ல வந்த சகடாசுரன் ஒரு வண்டியில் மறைந்திருந்தான், அவனுடைய உடல் வேறாகிப் பிளந்து வீழும்படி திருக்கால்களால் அவனை வென்ற பெருமானே, பிரமன், சிவன், இந்திரன், விண்ணோரெல்லாம் மகிழ்வோடு உன்னைச் சூழ்ந்து வழிபட, அவர்கள்மத்தியில் நீ சிறப்போடு விண்மேலே தோன்றவேண்டும், ஒருநாள் நாங்கள் அதைக் காணவேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.