ஆறாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 3, 4

தித்திக்கின்ற அமுதே
ஆறாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 3, 4
Updated on
2 min read

பாடல் - 3

வண்ணம் அருள்கொள் அணி மேகவண்ணா,
                                                           மாய அம்மானே,
எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே, இமையோர்
                                                           அதிபதியே,
தெள் நல் அருவி மணி, பொன், முத்து அலைக்கும்
                                                           திருவேங்கடத்தானே,
அண்ணலே, உன் அடிசேர அடியேற்கு ஆ ஆ என்னாயே.

அருளே வடிவெடுத்து வந்ததைப்போன்ற அழகுடைய மேகவண்ணனே, மாயங்களைச் செய்யும் அம்மானே, எண்ணத்தில் புகுந்து தித்திக்கின்ற அமுதே, தேவர்களின் அதிபதியே, தெளிவான, நல்ல அருவிகள் மணிகளையும் பொன்னையும் முத்துகளையும் கொண்டுவருகிற திருவேங்கடத்தில் எழுந்தருளியிருப்பவனே, அண்ணலே, உன் அடியவனான நான் உன்னுடைய திருவடியைச் சேரவேண்டும், ‘ஆ! ஆ!’ என்று என்மேல் இரக்கப்பட்டு அருள்செய்.

***

பாடல் - 4

ஆ ஆ என்னாது உலகத்தை அலைக்கும்
                                                  அசுரர் வாழ்நாள்மேல்
தீ வாய் வாளி மழைபொழிந்த சிலையா,
                                                  திரு மாமகள் கேள்வா,
தேவா, சுரர்கள், முனிக்கணங்கள் விரும்பும்
                                                  திருவேங்கடத்தானே,
பூஆர் கழல்கள் அருவினையேன் பொருந்துமாறு
                                                  புணராயே.

உலகத்தவர்மீது ‘ஆ! ஆ!’ என்று இரக்கப்படாமல் எல்லாரையும் துன்புறுத்துகிற அசுரர்கள்மேல் தீயைச் சொரியும் அம்புகளை மழையாகப் பொழிந்த வில்லைக்கொண்டவனே, அவர்களுடைய வாழ்நாளைத் தொலைத்து அழித்து உலகைக் காத்தவனே, சிறந்த திருமகளின் கணவனே, தேவனே, தேவர்கூட்டங்களும் முனிவர்கூட்டங்களும் விரும்புகின்ற திருவேங்கடத்தானே, அரிய தீவினைகளைச் செய்த நான், உன்னுடைய மலர்த் திருவடிகளைச் சேரவேண்டும், அதற்கு அருள்செய்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com