

பாடல் - 9
நங்கைமீர்! நீரும் ஓர் பெண் பெற்று நல்கினீர்,
எங்ஙனே சொல்லுகேன் யான் பெற்ற ஏழையை?
சங்கு என்னும், சக்கரம் என்னும், துழாய் என்னும்,
இங்ஙனே சொல்லும் இராப்பகல், என்செய்கேன்?
(தாய் சொல்கிறார்)
பெண்களே, நீங்கள் எல்லாரும் ஆளுக்கொரு பெண்ணைப்பெற்று வளர்க்கிறீர்கள், ஆனால், நான் பெற்ற மகள் மட்டும் ஏன் இப்படி இருக்கிறாள்?
இரவும் பகலும் எம்பெருமானையே இவள் நினைத்துக்கொண்டிருக்கிறாள், சங்கு என்கிறாள், சக்கரம் என்கிறாள், துளசி என்கிறாள், இப்படி எப்போதும் அவன் பெருமைகளைதான் சொல்லிக்கொண்டிருக்கிறாள்,
நான் என்னசெய்வேன்?
*****
பாடல் - 10
என்செய்கேன்? என்னுடைப் பேதை, என் கோமளம்
என் சொல்லும், என் வசமும் அல்லள், நங்கைமீர்,
மின்செய்பூண் மார்பினன் கண்ணல் கழல்துழாய்
பொன்செய் பூண் மென்முலைக்கு என்று மெலியுமே.
(தாய் சொல்கிறார்)
பெண்களே,
என்னுடைய மகள், மென்மையான பெண், என் பேச்சைக் கேட்பதில்லை, எனக்குக் கட்டுப்படுவதும் இல்லை, ஒளிவீசும் ஆபரணங்களை அணிந்த கண்ணனுடைய திருவடிகளில் உள்ள துளசியையே இவள் எண்ணிக்கொண்டிருக்கிறாள், தன்னுடைய மென்மையான, தங்க ஆபரணங்களை அணிந்த மார்பகங்களில் அந்தத் துளசியை அணிந்துகொள்ள வேண்டும் என்று எண்ணி மெலிகிறாள்.
நான் என்ன செய்வேன்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.