

பாடல் - 5
கண்ணி எனது உயிர், காதல் கனகச்சோதி முடி முதலா
எண்இல் பல்கலன்களும், ஏலும் ஆடையும் அஃதே,
நண்ணி மூ உலகும் நவிற்றும் கீர்த்தியும் அஃதே,
கண்ணன், எம்பிரான், எம்மான், கால சக்கரத்தானுக்கே.
கண்ணன், நம் தலைவன், எம்மான், காலத்தை நடத்தும் சக்கரத்தை உடைய எம்பெருமான், அவர் அணியும் மாலை, என் உயிர், அவருடைய ஒளிபொருந்திய திருமுடியில் தொடங்கி எண்ணற்ற ஆபரணங்கள், என் அன்பு, அவருடைய பொருந்திய ஆடையும், என் அன்புதான், மூன்று உலகத்தைச் சேர்ந்தவர்களும் பொருந்தச் சொல்லுகிற அவருடைய புகழும், என் அன்புதான்.
******
பாடல் - 6
கால சக்கரத்தொடு வெண்சங்கம் கை
ஏந்தினாய்,
ஞாலம் முற்றும் உண்டு, உமிழ்ந்த நாராயணனே
என்று என்று
ஓலம்இட்டு நான் அழைத்தால் ஒன்றும் வாராய்
ஆகிலும்,
கோலமாம், என் சென்னிக்கு உன் கமலம்அன்ன
குரைகழலே.
பகைவர்களுக்கு முடிவுக்காலத்தைக் கொண்டுவரும் சக்ராயுதத்தோடு வெண்ணிறச் சங்கைக் கையில் ஏந்தியவனே, உலகங்கள் அனைத்தையும் உண்டு, உமிழ்ந்த நாராயணனே என்றெல்லாம் நான் பெருங்குரலில் அழைத்தேன், ஆனால், நீ வரவில்லை, எனினும், என்னுடைய தலைக்கு அழகு, சத்தமிடுகின்ற வீரக்கழல்களை அணிந்த, தாமரைபோன்ற உன்னுடைய திருவடிகள்தான். (அவற்றை என் தலையில் சூடிக்கொண்டு வணங்குகிறேன்.)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.