

பாடல் - 5
கோமள வான் கன்றைப் புல்கி, கோவிந்தன் மேய்த்தன என்னும்,
போம்இள நாகத்தின் பின்போய் அவன் கிடக்கை ஈது என்னும்,
ஆம்அளவு ஒன்றும் அறியேன், அருவினையாட்டியேன் பெற்ற
கோமளவல்லியை மாயோன் மால்செய்து செய்கின்ற கூத்தே.
இளமையான, பெரிய கன்றைத் தழுவுகிறாள் என் மகள், ‘கோவிந்தன் மேய்த்த கன்று இது’ என்கிறாள், ஊர்ந்து செல்லுகின்ற இளைய நாகத்தின்பின்னே இவளும்
செல்கிறாள், ‘எம்பெருமானின் படுக்கை இது’ என்கிறாள், அரிய வினைகளைச் செய்தவளாகிய நான் பெற்ற இந்த மென்மையான, கொடிபோன்ற பெண்ணை அந்த மாயோன்
இப்படி மயங்கச்செய்து கூத்தாடுகிறானே, இனி என்ன நடக்கும்? எனக்குத் தெரியவில்லை.
******
பாடல் - 6
கூத்தர் குடம் எடுத்து ஆடில், கோவிந்தனாம் எனா ஓடும்,
வாய்த்த குழல் ஓசை கேட்கில், மாயவன் என்று
மையாக்கும்,
ஆய்ச்சியர் வெண்ணெய்கள் காணில் அவன் உண்ட
வெண்ணெய் ஈது என்னும்,
பேய்ச்சி முலை சுவைத்தாற்கு என் பெண் கொடி
ஏறிய பித்தே!
ஊரில் யாரேனும் கூத்தர்கள் குடத்தை வைத்து ஆடினால், ‘கோவிந்தன் குடக்கூத்து ஆடுகிறான்’ என்று அங்கே ஓடுகிறாள் என் மகள், இனிய குழலோசையைக் கேட்டால்,
‘மாயவன் குழலூதுகிறான்’ என்று மயங்கிநிற்கிறாள், ஆய்ச்சியர்கள் கடைந்துவைத்த வெண்ணெயைக் கண்டால், ‘அவன் உண்ட வெண்ணெய் இது’ என்கிறாள், பேய்ச்சியான
பூதனையின் மார்பைச் சுவைத்து அவளை வீழ்த்திய எம்பெருமான் மீது, கொடி போன்ற என் மகளுக்கு இப்படிப் பித்தேறிவிட்டதே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.