நான்காம் பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 1,2

மாயப்போர் செய்த
நான்காம் பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 1,2
Updated on
1 min read

பாடல் - 1

தீர்ப்பாரை யாம் இனி எங்ஙனம் நாடுதும்? அன்னைமீர்,
ஓர்ப்பால் இவ் ஒள்நுதல் உற்ற நல்நோய் இது தேறினோம்,
போர்ப் பாகுதான் செய்து அன்று ஐவரை வெல்வித்த மாயப்போர்த்
தேர்ப்பாகனார்க்கு இவள் சிந்தை துழாஅய்த் திசைக்கின்றதே.

(தோழி சொல்கிறார்)

தாய்மார்களே, ஆராய்ந்து பார்த்தால், ஒளிபொருந்திய நெற்றியை உடைய என் மகளுக்கு வந்திருக்கும் நல்ல நோய் இதுதான் என்று புரிகிறது, அன்றைக்குப் போருக்குரிய செயல்களைச் செய்து பாண்டவர்கள் ஐவரையும் வெல்லச்செய்தான் எம்பெருமான், மாயப்போர் செய்த அந்தத் தேர்ப்பாகனாரை எண்ணி இவளுடைய சிந்தனை கலங்கி மயங்குகிறது, இந்த நோயைத் தீர்ப்பவர்கள் யார்? அவர்களை நாம் எங்கே சென்று தேடுவது?

******

பாடல் - 2

திசைக்கின்றதே, இவள் நோய் இது மிக்க பெரும்தெய்வம்,
இசைப்பு இன்றி நீர் அணங்கு ஆடும் இளம்தெய்வம் அன்று இது,
திசைப்பு இன்றியே சங்குசக்கரம் என்று இவள் கேட்க நீர்
இசைக்கிற்றிர் ஆகில், நன்றே இல் பெறும், இது காண்மினே.

(தோழி சொல்கிறாள்)

இவளுக்கு வந்திருக்கும் நோயை எண்ணி நீங்கள் திகைக்க வேண்டியதில்லை, இந்த நோய் மிகுந்த பெருந்தெய்வத்தால் வந்தது, சிறுதெய்வத்தால் வந்த நோய் அன்று, ஆகவே, நீங்கள் தகுதியில்லாத சிகிச்சைகளையெல்லாம் இவளுக்குச் செய்யாதீர்கள், வெறியாடல் போன்றவற்றுக்கு ஏற்பாடு செய்யாதீர்கள், அவற்றால் இந்த நோய் தீராது, அதற்குப் பதிலாக, குழப்பமில்லாமல் ஒரு வேலை செய்யுங்கள், இவளுடைய காதில் கேட்கும்படி 'சங்கு, சக்கரம்' என்று சொல்லுங்கள், இவள் நலம் பெற்றுவிடுவாள், அதை நீங்கள் காணுங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com