நான்காம் பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 3,4

ஏமாற்றுக்காரப்பெண் சொல்கிறார்
நான்காம் பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 3,4
Updated on
1 min read

பாடல் - 3

இதுகாண்மின் அன்னைமீர், இக்கட்டுவிச்சி சொல் கொண்டு நீர்
எதுவானும் செய்து அங்கு ஓர் கள்ளும் இறைச்சியும் தூவேன்மின்,
மதுவார் துழாய்முடி மாயப்பிரான் கழல் வாழ்த்தினால்
அதுவே இவள் உற்ற நோய்க்கும் அருமருந்து ஆகுமே.

(தோழி சொல்கிறாள்)

அன்னைமார்களே, இதைக் காணுங்கள், உங்கள் மகளின் நோயைத் தீர்ப்பதற்குக் கள்ளையும் இறைச்சியையும் தூவ வேண்டும் என்று இந்தக் கட்டுவிச்சி சொல்கிறார், அதைக் கேட்டு நீங்கள் எதையாவது செய்யாதீர்கள், கள்ளையும் இறைச்சியையும் தூவாதீர்கள், (உங்கள் மகளின் நோயைத் தீர்க்கும் வழி இதுவல்ல), தேன் ஒழுகும் திருத்துழாயை அணிந்த திருமுடியைக்கொண்ட மாயப்பிரான், எம்பெருமானின் திருவடிகளை வாழ்த்துங்கள், இவளுடைய நோய்க்கு அதுவே சிறந்த மருந்து.

பாடல் - 4

மருந்து ஆகும் என்று அங்கு ஓர் மாய வலவை சொல் கொண்டு நீர்
கரும்சோறும் மற்றைச் செம்சோறும் களன் இழைத்து என் பயன்?
ஒருங்கு ஆகவே உலகு ஏழும் விழுங்கி உமிழ்ந்திட்ட
பெரும்தேவன் பேர் சொல்லகிற்கில் இவளைப் பெறுதிரே.

(தோழி சொல்கிறார்)

உங்கள் மகளுடைய நோய் தீர்வதற்காக, ஏதோ சிறுதெய்வங்களுக்குச் சோறு படைக்க வேண்டும் என்று ஓர் ஏமாற்றுக்காரப்பெண் சொல்கிறார், அதைக் கேட்டதும், அதுவே இவளுடைய நோய்க்கு மருந்து என்று எண்ணுகிறீர்கள், கருமையான, சிவப்பான சோற்றை அங்கே படைக்கிறீர்கள், அதனால் என்ன பயன்? (ஏதுமில்லை). ஒரே நேரத்தில் ஏழு உலகையும் விழுங்கி உமிழ்ந்த பெரிய தேவன், எம்பெருமானின் பெயரைச் சொல்லுங்கள், இவளுடைய நோய் தீரும், இவளைத் திரும்பப் பெறுவீர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com