

பாடல் - 5
இவளைப் பெறும் பரிசு, இவ் அணங்கு ஆடுதல் அன்று,
அந்தோ,
குவளைத் தடம் கண்ணும் கோவைச் செவ்வாயும்
பயந்தனள்,
கவளக் கடாக் களிறு அட்ட பிரான் திருநாமத்தால்
தவளப்பொடி கொண்டு நீர் இட்டிடுமின், தணியுமே.
(தோழி சொல்கிறாள்)
உங்கள் மகளுடைய நோய் தீர்வதற்காக, அணங்காடுதலுக்கு ஏற்பாடு செய்துள்ளீர்கள். ஆனால், அவளுடைய நோயைத் தீர்க்கும் வழி இதுவல்ல, குவளைமலர் போன்ற பெரிய கண்கள், கோவைப்பழம் போன்ற சிவந்த வாய் கொண்ட உங்கள் மகள் பசலை நோய் கொண்டு வாடுகிறாள், கவளத்தை உண்ணும் மதயானையான குவலயாபீடத்தை வென்ற எம்பெருமானின் பெயரைச் சொல்லுங்கள், அவன் அடியவர்களுடைய தூய்மையான பாத தூசியை இவளுக்கு இடுங்கள், அந்தப் பசலை நோய் தணியும்.
*******
பாடல் - 6
தணியும்பொழுது இன்றி நீர் அணங்கு ஆடுதிர்,
அன்னைமீர்,
பிணியும் ஒழிகின்றது இல்லை, பெருகும் இது
அல்லால்,
மணியின் அணிநிற மாயன் தமர் அடி நீறு கொண்டு
அணிய முயலின் மற்று இல்லை கண்டீர் இவ்
அணங்குக்கே.
(தோழி சொல்கிறாள்)
தாய்மார்களே, உங்கள் மகளுடைய நோய் தீர்வதற்காக எந்நேரமும் அணங்காடுதலுக்கு ஏற்பாடு செய்துள்ளீர்கள், ஆனால், அதன்மூலம் அந்த நோய் தீர்வதில்லை, அதிகரிக்கிறது, நீலமணி போன்ற நிறம் கொண்ட மாயனின் அடியவர்களுடைய பாதம் பட்ட தூசியைக் கொண்டுவந்து இவளுக்கு அணிவியுங்கள்(பூசுங்கள்), இந்தப் பெண்ணுக்கு அதைவிட்டால் வேறு நல்ல மருந்து எதுவும் இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.