

பாடல் - 7
அணங்குக்கு அருமருந்து என்று, அங்கு ஓர் ஆடும் கள்ளும் பராய்,
துணங்கை எறிந்து, நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்,
உணங்கல் கெடக் கழுதை உதடு ஆட்டம் கண்டு என்பயன்?
வணங்கீர்கள் மாயப்பிரான் தமர் வேதம் வல்லாரையே.
(தோழி சொல்கிறாள்)
தாய்மார்களே, உங்கள் மகள் கொண்ட நோய்க்கு அரிய மருந்து இதுதான் என்று எண்ணி ஆட்டையும் கள்ளையும் வைத்து வணங்குகிறீர்கள், துணங்கை என்ற கூத்தை ஆடுகிறீர்கள், இதனால் உங்கள் தோள்தான் வலிக்கும், வேறு எந்தப் பயனும் இருக்காது, காயவைத்த நெல்லைக் கழுதை மேய்கிறது என்றால், அதை அடித்துத் துரத்தாமல் அதன் வாய் அசைவதை வேடிக்கை பார்ப்பீர்களா? இதையெல்லாம் நிறுத்திவிட்டு, மாயப்பிரானான எம்பெருமானின் பக்தர்கள், வேதம் வல்லவர்களை வணங்குங்கள், உங்கள் மகள் திரும்பக்கிடைப்பாள்.
*******
பாடல் - 8
வேதம் வல்லார்களைக் கொண்டு, விண்ணோர் பெருமான் திருப்
பாதம் பணிந்து, இவள் நோய் இது தீர்த்துக்கொள்ளாது போய்
ஏதம் பறைந்து, அல்ல செய்து, கள் ஊடு கலாய்த் தூஉய்,
கீத முழவுஇட்டு நீர் அணங்கு ஆடுதல் கீழ்மையே.
(தோழி சொல்கிறாள்)
இவளுடைய நோய் தீரவேண்டுமென்றால், குற்றமானவற்றைச் சொல்லாதீர்கள், தகாதவற்றைச் செய்யாதீர்கள், கள்ளைக் கலந்து வீட்டில் தூவாதீர்கள், தகாத பாடல்களோடு முழவு ஒலிக்க அணங்கு ஆடாதீர்கள், இவையெல்லாம் கீழ்மையான செயல்கள். மாறாக, நீங்கள் வேதம் வல்லவர்களை நாடுங்கள், அவர்களுடைய வழிகாட்டுதலில், விண்ணோரின் தலைவனான எம்பெருமானின் திருப்பாதங்களை வணங்குங்கள், அதுவே சரியான முறை, அதன்மூலம் இவளுடைய நோய் தீரும், இவள் நலம் பெறுவாள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.