மூன்றாம் பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 3, 4

திருத்துழாய் மாலை அணிந்தவன்
Updated on
1 min read

நாதனை, ஞாலமும் வானமும்
ஏத்தும் நறும்துழாய்ப்
போதனை, பொன் நெடும் சக்கரத்து
எந்தை பிரான்தன்னைப்
பாதம் பணியவல்லாரைப்
பணியும் அவர்கண்டீர்
ஓதும் பிறப்பு இடைதோறும் எம்மை
ஆளுடையார்களே.

எல்லார்க்கும் தலைவன், இந்த உலகத்தில் வாழ்வோரும் மேலுலகத்திலுள்ள தேவர்களும் போற்றுகிறவன், மணம் மிகுந்த திருத்துழாய் மாலை அணிந்தவன், அழகிய, நீண்ட சக்ராயுதத்தை ஏந்தியவன், நம் தந்தை, நம் தலைவன், எம்பெருமான், அத்தகைய பெருமானின் திருவடிகளை வணங்கும் அடியவர்களைப் பணிகிறவர்கள் யாரோ, எல்லாப் பிறவிகளிலும் அவர்களே என் தலைவர்கள்.

•••

பாடல் 4

உடைஆர்ந்த ஆடையன், கண்டிகையன்,
உடை நாணினன்,
புடைஆர் பொன்நூலினன், பொன்முடியன்,
மற்றும் பல்கலன்
நடையா உடைத் திருநாரணன்
தொண்டர் தொண்டர் கண்டீர்
இடைஆர் பிறப்பு இடைதோறும் எமக்கு
எம் பெருமக்களே.

பொருந்திய திருஆடையை உடுத்தியிருக்கிறவன், கண்டிகை என்ற கழுத்தணியை அணிந்தவன், அரைநாண் அணிந்தவன், பக்கங்களில் பொன்னாலான பூணூலைக் கொண்டவன், பொன்னாலான திருமுடியைக்கொண்டவன், இன்னும் பல ஆபரணங்களைத் தன் இயல்பாகவே கொண்ட திருநாரணன், எம்பெருமான், அத்தகைய பெருமானின் தொண்டர்களாகச் சேவை செய்கிறவர்கள், அந்தத் தொண்டுத்தன்மைக்கே எல்லையாகத் திகழ்கிறவர்கள் யாரோ, எல்லாப் பிறவிகளிலும் அவர்களே நான் வணங்கும் பெருமக்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com