பெருமக்கள் உள்ளவர்தம்
பெருமானை, அமரர்கட்கு
அருமைஒழிய அன்று ஆர்அமுது
ஊட்டிய அப்பனைப்
பெருமைபிதற்றவல்லாரைப்
பிதற்றும் அவர்கண்டீர்
வருமையும் இம்மையும் நம்மை
அளிக்கும் பிராக்கள்.
பெருமக்களின் பெருமான், அன்றைக்கு, அரிய அமுதமானது தேவர்களுக்கு எளிதில் கிடைக்கும்வண்ணம் ஊட்டிய அப்பன், எம்பெருமான், அவனது தொண்டர்கள் அவனுடைய பெருமையைச் சொல்லிப் பிதற்றுகிறார்கள், அத்தகைய தொண்டர்களின் பெருமைகளைச் சொல்லிப் பிதற்றுகிறவர்கள் யாரோ, அவர்கள்தான் இந்தப் பிறவியிலும் இனி வரப்போகும் பிறவிகளிலும் நம்மைக் காக்கும் தலைவர்கள்.
•••
பாடல் 6
அளிக்கும் பரமனை, கண்ணனை,
ஆழிப்பிரான்தன்னை,
துளிக்கும் நறும்கண்ணித் தூமணி
வண்ணன், எம்மான்தன்னை,
ஒளிக்கொண்ட சோதியை உள்ளத்துக்
கொள்ளும் அவர்கண்டீர்
சலிப்புஇன்றி ஆண்டு எம்மைச்
சன்மசன்மாந்தரம் காப்பவரே.
நம்மைக் காக்கும் பரமன், கண்ணன், சக்ராயுதத்தை ஏந்திய தலைவன், தேன் துளிகள் வெளிப்படுகின்ற, நறுமணம் மிக்க மாலையை அணிந்தவன், தூய்மையான மாணிக்கத்தின் வண்ணம்கொண்டவன், நம் தலைவன், ஒளிநிறைந்த சோதிவடிவானவன், எம்பெருமான், அத்தகைய பெருமானை உள்ளத்தில் கொள்கிறவர்கள் யாரோ, அவர்கள்தான் எல்லாப் பிறவிகளிலும் தொடர்ந்து எங்களை ஆள்கிறார்கள், சலிப்பில்லாமல் எங்களைக் காக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.