சன்மசன்மாந்தரம் காத்து அடியார்களைக்
கொண்டுபோய்த்
தன்மை பெறுத்தித் தன் தாள்இணைக்கீழ்க்
கொள்ளும் அப்பனைத்
தொன்மை பிதற்றவல்லாரைப்
பிதற்றும் அவர்கண்டீர்
நன்மை பெறுத்து எம்மை நாள் உய்யக்
கொள்கின்ற நம்பரே.
தன்னுடைய அடியவர்களுக்குப் பிறவித்துயரம் வராதபடி காக்கிறவன், அவர்களுக்குத் தனது திருவுருவத்தைக் காண்பித்துத் தன் திருவடியின் கீழ் அமர்த்துகிற அப்பன், எம்பெருமான், அவனது தொண்டர்கள், அவனுடைய பழைமையை, பெருமைகளைச் சொல்லிப் பிதற்றுகிறார்கள், அத்தகைய தொண்டர்களின் பெருமைகளைச் சொல்லிப் பிதற்றுகிறவர்கள் யாரோ, அவர்களே எங்களுடைய நம்பிக்கைக்குரியவர்கள், எப்போதும் எங்களை ஆள்கிறவர்கள், எங்களுக்கு நன்மை செய்கிறவர்கள்.
•••
பாடல் 8
நம்பனை, ஞாலம் படைத்தவனை,
திருமார்பனை,
உம்பர் உலகினில் யார்க்கும்
உணர்வு அரியான்தன்னைக்
கும்பி நரகர்கள் ஏத்துவரேலும் அவர்கண்டீர்
எம் பல்பிறப்பு இடைதோறும்
எம் தொழுகுலம் தாங்களே.
அடியவர்களால் நம்பப்படுகிறவன், இவ்வுலகைப் படைத்தவன், மார்பிலே திருமகளைத் தரித்தவன், மேலுலகிலுள்ள தேவர்களால்கூட உணரப்பட இயலாத பெருமைகொண்டவன், எம்பெருமான், கும்பீபாக நரகத்தில் இருந்தாலும்கூட அப்பெருமானின் பெருமைகளைச் சொல்லிப் போற்றுகிறவர்கள் யாரோ, அவர்கள்தான் எங்களுடைய பல பிறவிகளிலும் எங்களுக்குத் தெய்வங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.