‘கொள்வன் நான், மாவலி, மூ அடி தா’ என்ற
கள்வனே, கஞ்சனை வஞ்சித்து, வாணனை
உள்வன்மை தீர, ஓர் ஆயிரம் தோள் துணித்த
புள்வல்லாய், உன்னை எஞ்ஞான்று பொருந்துவனே?
மகாபலியிடம் சென்று, ‘மூன்று அடி நிலம் கொடு, நான் ஏற்றுக்கொள்வேன்’ என்று சொன்ன கள்வனே, கம்சனைக் கொன்றவனே, வாணனின் மன வலிமை தீரும்படி அவனுடைய ஆயிரம் தோள்களையும் துண்டித்தவனே, கருடனை வாகனமாகக் கொண்டவனே, உன்னை நான் என்றைக்குச் சேருவேன்?
•••
மூன்றாம் பத்து எட்டாம் திருவாய்மொழி - பாடல் 10
பொருந்திய மா மருதின் இடை போய எம்
பெரும்தகாய், உன் கழல் காணிய பேதுஉற்று
வருந்தி நான் வாசக மாலை கொண்டு உன்னையே
இருந்துஇருந்து எத்தனை காலம் புலம்புவனே?
பொருந்திய, பெரிய மருதமரங்களின் இடையே சென்ற எங்கள் பெருந்தகையே, உன்னுடைய வீரக்கழலணிந்த திருவடிகளைக் காண வேண்டும் என்று மயங்கினேன், வருந்தினேன், சொற்களாலாகிய மாலையைக்கொண்டு உன்னைப் போற்றினேன், இப்படி நான் இன்னும் எத்தனை காலம் புலம்ப வேண்டுமோ!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.