மூன்றாம் பத்து இரண்டாம் திருமொழி - பாடல் 3, 4

கையில் ஏந்தியது ஆயுதம் அல்ல
Updated on
1 min read

கொல்லா மாக்கோல் கொலைசெய்து பாரதப்போர்
எல்லாச் சேனையும் இடுநிலத்து அவித்த எந்தாய்,
பொல்லா ஆக்கையின் புணர்வினை அறுக்கல் அறா,
சொல்லாய், யான் உன்னைச் சார்வது ஓர் சூழ்ச்சியே.

பாரதப் போரின்போது நீ கையில் ஏந்தியது ஆயுதம் அல்ல, யாரையும் கொல்லாத, குதிரை ஓட்டுகிற சாட்டைதான், ஆனால், அதைக்கொண்டே அனைத்துச் சேனைகளையும் அழித்தாய், எங்கள் தந்தையே, பொல்லாத இந்த உடல் என்னும் கட்டை என்னால் அறுக்க இயலவில்லை, நான் உன்னைச் சேர்வது எப்படி? அதற்கு ஒரு வழி சொல்.

•••

பாடல் - 4

சூழ்ச்சி ஞானச் சுடர்ஒளிஆகி என்றும்
ஏழ்ச்சி, கேடு இன்றி எங்கணும் நிறைந்த எந்தாய்,
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாள் இணைக்கீழ்
வாழ்ச்சி யான்சேரும் வகை அருளாய் வந்தே.

எல்லாரையும் சூழக்கூடிய ஞானச்சுடரொளி நீ, என்றும் வளர்தல், தேய்தல் இல்லாமல் எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கும் எங்கள் தந்தை நீ,  தாழ்வான விஷயங்களை நான் தவிர்க்க வேண்டும், உன்னுடைய திருவடிகளின் கீழ் வாழ வேண்டும், அதற்கு வழி சொல்வாய்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com